கம்பீருடன் முற்றிய மோதல்? இந்திய அணி ஹோட்டலில் இருந்து வெளியேறிய விராட் கோலி
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியுடன் லண்டன் வந்தடைந்த நட்சத்திர பேட்டர் விராட் கோலி, ஹோட்டலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்து புறப்பட்டார். இந்திய அணி வெள்ளிக்கிழமை அன்று லண்டன் வந்தடைந்தது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில், இந்திய வீரர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஹோட்டலுக்குள் சென்றனர். இருப்பினும், கோலி அவர்களுடன் செல்லாமல், தனக்காகக் காத்திருந்த காரில் ஏறி ஹோட்டலில் இருந்து தனியாகப் புறப்பட்டார். ஏற்கனவே கோலிக்கும், கம்பீருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதாக கூறப்பட்ட நிடிலயில், இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

ஆனால் அவர் லண்டனில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. முன்னாள் இந்திய கேப்டனான கோலி, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் லண்டனுக்குக் குடியேறியதாகக் கூறப்படுகிறது. தசைப்பிடிப்பு காயம் காரணமாக கடந்த மாதம் இந்திய மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்த நட்சத்திர பேட்டர் 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், அதற்கு அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 66 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அசத்தலான அரைசதம் அடித்தார். இந்த சூழலில் தொடரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நாளை ஞாயிற்றுகிழமை கிரிக்கெட்டின் மெக்காஹ் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் பேட்டிங்கில் தடுமாறி வரும் ரோகித் சர்மாவை நீக்க கம்பீர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் தேவைக்கு அதிகமாக அதிக ஆல்ரவுண்டர்களை கம்பீர் பிளேயிங் லெவனில் சேர்க்கிறார். இது எல்லாம் விராட் கோலிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் இருவரும் பேசி கொள்வதையே நிறுத்தி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தருணத்தில் தான் ஹோட்டலில் தங்காமல் கோலி, தனது வீட்டிற்கு சென்று இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

