மும்பை: விராட் கோலி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது தற்காலிக கேப்டன் ஆகப் போகிறார் என்ற பேச்சு சில நாட்களாக கிளம்பிய நிலையில் அது நடக்கக் கூடாது என முன்னெச்சரிக்கையாக பும்ராவை துணை கேப்டனாக அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன? ஏன் விராட் கோலி தற்காலிக கேப்டன் ஆகக் கூடாது என பிசிசிஐ நினைக்கிறது? என்பது குறித்து பார்க்கலாம்.
அக்டோபர் 16 முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா தான் அணியின் துணை கேப்டன் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்படவில்லை. அந்த தொடருக்கு துணை கேப்டன் என யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட வேலையின் காரணமாக ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் எனவும், அப்போது இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக வேறு ஒருவர் செயல்படுவார் எனவும் கூறப்பட்டது. இந்திய அணிக்கு துணை கேப்டன் யார் என வங்கதேச டெஸ்ட் தொடரில் அறிவிக்கப்படாததால் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அணியின் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.
விராட் கோலி கேப்டனாக இருந்த போது அவர் பிடிவாதமாக சில முடிவுகளை எடுத்து வந்தார். அது பிசிசிஐ தலைமையில் இருந்தவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பை வெல்லவில்லை என்பதை சுட்டிக் காட்டி கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ரோஹித் சர்மா அணியின் கேப்டன் ஆனார். தற்போது சமூக வலைதளங்கள் மூலம் அழுத்தம் ஏற்பட்டால் மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலியை தற்காலிக கேப்டனாக நியமிக்க வேண்டிய சூழல் உருவாகும்.
அதனால் தான் அதற்கு முந்தைய தொடரான நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலேயே அணியின் துணை கேப்டன் யார்? என்பதை பிசிசிஐ தெளிவுபடுத்தி இருக்கிறது. இதன் மூலம் பும்ராவே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா இல்லாத போது இந்திய அணியை வழி நடத்துவார் என மறைமுகமாக உணர்த்தப்பட்டு இருக்கிறது.