ராஜ்கோட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது.
அப்போது ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கின் இடையே சோர்ந்து காணப்பட்டார். அவர் உட்கார நாற்காலியை எடுத்து வந்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.
அப்போது விராட் கோலி அவருக்கு அருகே இருந்த மற்றொரு பேட்ஸ்மேனிடம் சென்று ஸ்டீவ் ஸ்மித்தை வெறுப்பேற்றும் வேலையை செய்தார்.
என்ன நடந்தது? : இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இந்திய பந்துவீச்சை தங்கள் அதிரடி ஆட்டத்தால் புரட்டி எடுத்தனர். வார்னர் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் உடன் இணைந்து ரன்மழை பொழிய ஆரம்பித்தார். அப்போது இருவரும் அரைசதம் கடந்து பேட்டிங் செய்து வந்தனர். மார்ஷ் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஸ்டீவ் ஸ்மித் வெயிலின் காரணமாக சோர்ந்து காணப்பட்டார்.
அதனால், ஆஸ்திரேலிய அணியினர் அவருக்கு உட்கார நாற்காலி எடுத்து வந்தனர். தலையில் ஐஸ் கட்டிகளை வைத்து அவர சூட்டை தணிக்க உதவிக் கொண்டு இருந்தனர். மற்றொரு பேட்ஸ்மேன் ஆன லாபுஷேன் ஸ்டீவ் ஸ்மித் அருகே நின்று இருந்தார்.
லாபுஷேன் அருகே சென்ற இந்திய வீரர் விராட் கோலி, அவரிடம் கேலியாக நடனம் ஆடிக் காட்டிவிட்டு வந்தார். அனேகமாக வெயிலின் தாக்கத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் தாங்க முடியாமல் போவது குறித்து கோலி கிண்டல் செய்திருக்கலாம்.
அதைக் கண்ட ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித்தை தான் கோலி கிண்டல் செய்கிறார் என இணையத்தில் கூறத் தொடங்கினர். விராட் கோலி போட்டிகளின் இடையே இது போன்ற செயல்களை செய்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இது ஸ்டீவ் ஸ்மித்தை கொஞ்சம் சீண்டிப் பார்த்தது போல இருந்தது.
ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 352 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 74, மார்னஸ் லாபுஷேன் 72 ரன்கள் குவித்தனர். பும்ரா அதிக ரன்கள் கொடுத்தாலும் 3 விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளித்தார்.