வதோதரா: "இந்தியாவில் இவ்வளவு புகழ் பெற்றும், விராட் கோலி ஏன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்?" என்ற கேள்விக்கு, வதோதரா விமான நிலையத்தில் நடந்த சம்பவமே தக்க பதிலளித்துள்ளது. ரசிகர்களின் அன்பு என்ற பெயரிலான அத்துமீறல், ஒரு நட்சத்திர வீரரை எந்த அளவிற்கு மூச்சுத் திணற வைக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வதோதரா வந்து இறங்கினார். அவர் வருவதை அறிந்த ரசிகர்கள், விமான நிலையத்தில் பெருமளவில் திரண்டனர்.

கோலி வெளியே வந்ததும், ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். பாதுகாப்புக் காவலர்கள் மனிதச் சங்கிலி போலக் கைகோர்த்து அரண் அமைத்த போதிலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கிய விராட் கோலியைத் தொடவும், அருகில் சென்று பார்க்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர்.
அந்தத் தள்ளுமுள்ளுவில் விராட் கோலி நடப்பதற்கே மிகவும் சிரமப்பட்டார். இருப்பினும், முகத்தில் எந்தக் கோபத்தையும் காட்டாமல் அவர் அமைதியாகக் காரை நோக்கிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, "இப்படி மூச்சுத் திணற வைத்தால், அவர் எப்படி இந்தியாவில் நிம்மதியாக இருப்பார்?" என்ற விவாதம் எழுந்துள்ளது.
விராட் கோலி தற்போது தனது பெரும்பாலான நேரத்தை லண்டனில் குடும்பத்துடன் செலவிடுகிறார். கிரிக்கெட் போட்டிகள் இருக்கும்போது மட்டுமே இந்தியா வருகிறார். இதற்காக அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. ஆனால், அதற்கான நியாயமான காரணம் தற்போது புரிகிறது.
லண்டனிலோ அல்லது சிட்னியிலோ விராட் கோலியால் ஒரு சாதாரண மனிதரைப் போலத் தெருவில் நடந்து செல்ல முடியும்.
குடும்பத்துடன் தொந்தரவின்றி உணவகங்களுக்குச் செல்ல முடியும்.
அங்கு மக்கள் அவரது தனிப்பட்ட இடைவெளியை மதிக்கின்றனர்.
ஆனால் இந்தியாவில், ஒரு பிரபலம் சாதாரண காபி ஷாப்பிற்குச் சென்றால் கூட, நூற்றுக்கணக்கானோர் கூடிவிடுகின்றனர். எந்நேரமும் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பது போன்ற உணர்வு மனரீதியாகச் சோர்வை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி கேட்டபோது, கோலி அதைக் கவனிக்காமல் சென்ற வீடியோ வெளியாகி விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், நீண்ட தூரப் பயணம், உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே ஆர்சிபி அணிக்கு அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி, "நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, வெகு நாட்களுக்கு என்னை நீங்கள் பார்க்க முடியாது. நான் காணாமல் போய்விடுவேன்" என்று கூறியிருந்தார். புகழின் வெளிச்சத்திலிருந்து விலகி, ஒரு சாதாரண மனிதராக வாழ்வதையே அவர் விரும்புகிறார் என்பதையே இது காட்டுகிறது.
வதோதராவில் நடந்ததைப் போன்ற சம்பவங்கள் தொடரும் வரை, விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் அமைதி தேடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுவதைத் தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம்.