மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் டோணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோஹ்லிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி திடீரென ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டதால், அதற்கு பதிலாக, நவம்பரில், இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

இந்த சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி தேர்வு இன்று நடைபெற்றது. இதன்படி, டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டு கோஹ்லி, இத்தொடருக்கான கேப்டனாக்கப்பட்டுள்ளார். டோணிக்கு பதிலாக விருத்திமான் சாகா, விக்கெட் கீப்பராக களம் காண்வார்.
ஓய்வில் இருந்த சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், இளம் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஒரு போட்டியிலும் இதுவரை விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி, ஷிக்கர் தவான், அஜிங்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, விருத்திமான் சாகா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, முரளி விஜய், வருண் ஆரோன், அக்ஷர் பட்டேல்.