சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தயாராகி வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்காராவைத் தொடர்ந்து, 28,000 சர்வதேச ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற அரிய பெருமையை அடைய கோலிக்கு இன்னும் வெறும் 25 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் உள்ளார்.
தற்போது, கோலி 27,975 சர்வதேச ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம், இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்கக்காராவின் 28,016 ரன்கள் என்ற சாதனையை முறியடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கும் அவருக்கு இன்னும் 42 ரன்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

கோலி இதுவரை 556 சர்வதேச போட்டிகள் மற்றும் 623 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 27,975 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 52.58 ஆகவும், அவர் 84 சதங்கள் மற்றும் 145 அரை சதங்களையும் அடித்துள்ளார். அவரை விட முன்னிலையில் உள்ள சங்கக்கார, 594 போட்டிகள் மற்றும் 666 இன்னிங்ஸ்களில் 46.77 சராசரியுடன் 28,016 ரன்கள் எடுத்துள்ளார் (63 சதங்கள், 153 அரைசதங்கள்). சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அனைத்து வடிவங்களிலும் அவர் 664 போட்டிகள் மற்றும் 782 இன்னிங்ஸ்களில் 48.25 சராசரியுடன் 34,357 ரன்கள் (100 சதங்கள், 164 அரைசதங்கள்) எடுத்துள்ளார்.
நியூசிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இந்திய ஒருநாள் அணி கேப்டன் ஷுப்மன் கில், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ரோஹித் ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர், விராட் பாய் மிகச் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்" என்று இருவரையும் பாராட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்த இருவரையும் அணியில் வைத்திருப்பது கேப்டனாக என் பணியை மிகவும் எளிதாக்குகிறது. சவாலான சூழ்நிலைகளில் அவர்களின் அனுபவம் நிச்சயம் உதவும். அவர்கள் அத்தகைய சூழ்நிலைகளில் அதிகமாக இருந்திருப்பதால், அவர்களின் ஆலோசனை எந்த ஒரு கேப்டனுக்கும் மிகவும் மதிப்புமிக்கது," என்று ஷுப்மன் கில் தெரிவித்தார்.