மும்பை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை அதிவேகமாக விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பதற்கு இந்திய அணியின் விராட் கோலிக்கு சாதகமான சூழல் அமைந்துள்ளது.
6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இன்று பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது. இந்த தொடர் ஹைபிரிட் மாடலில் நடக்கவுள்ளதால், இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதற்காக விராட் கோலி சிறப்பாக தயாராகி வருகிறார். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான 13 போட்டிகளில் விளையாடி 536 ரன்களை விளாசி இருக்கிறார். அதிலும் 2012ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில் 183 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் கூட பாகிஸ்தான் அணிக்கு எதிரான 53 பந்துகளில் 83 ரன்கள் விளாசி விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டின் கிங் என்பதை நிரூபித்தார்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் விராட் கோலி முக்கியமான சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை விராட் கோலி 12,898 ரன்கள் விளாசி இருக்கிறார். இன்னும் 102 ரன்கள் சேர்த்தால் 13 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற 5வது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
அதேபோல் குறைந்த போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார். 265 இன்னிங்ஸ்களில் 12898 ரன்களை விளாசியுள்ள விராட் கோலி, இன்னும் 55 இன்னிங்ஸ்களில் 102 ரன்கள் சேர்த்தால் கூட அதிகவேகமாக 13 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைக்க முடியும்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர், சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் நடப்பாண்டில் ஜெயசூர்யா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரின் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 265 இன்னிங்ஸ்களில் விராட் கோலி சுமார் 13 ஆயிரம் ரன்களை விளாசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.