டெல்லி: டிஎன்பிஎல் லீக் வெற்றியை தொடர்ந்து நாடு முழுவதும் ஒவ்வொரு கிரிக்கெட் சங்கமும் தங்களது மாநிலத்தை மையமாக வைத்து t20 தொடரை நடத்தி வருகிறது. அதில் டெல்லி பிரிமியர் லீக் தொடர் பெரும் வெற்றியை பெற்றது. இதில் விளையாடிய பல வீரர்கள் ஐபிஎல் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த முதல் சீசனில் ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணி, சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் பிரியன்ஸ் ஆர்யா விக்னேஷ் ரதி உள்ளிட்ட வீரர்கள் பிரபலம் அடைந்தார்கள்.

இதில் குறிப்பாக பிரியன்ஸ் ஆர்யா மூன்று கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதில் கடந்த சீசனில் ஒரு சதம் உட்பட 475 ரன்கள் விளாசினார். இதை போன்று சர்ச்சைக்கு பெயர் போன திக்வேஷ் ரதி 13 போட்டிகளில் 14 விக்கெட் கைப்பற்றியிருந்தார். இந்த நிலையில் அடுத்த சீசனுக்கான ஏலம் வரும் ஜூலை மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த ஏலத்தில் விராட் கோலியின் அண்ணன் மகனான ஆரியவீர் கோலி பங்கேற்கிறார். விராட் கோலியின் அண்ணனான விகாஷ் கோலி தனது மகனை கிரிக்கெட்டில் வளர்த்து வருகிறார். விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மாவே,விராட் கோலியின் அண்ணன் மகனான ஆரியவிற்கும் பயிற்சி கொடுத்து வருகிறார்.
விராட் கோலி போல் அல்லாமல் சுழற் பந்துவீச்சாளராக ஆரியவீர் இருக்கின்றார். இதேபோன்று சேவாக்கின் 17 வயது மகனான ஆரியவீர் சேவாக்கும் இந்த ஏலத்தில் பங்கேற்று இருக்கிறார். ஆரியவீர் சேவாக் ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான டெல்லி அணியில் களமிறங்கி மேகாலயாவுக்கு எதிராக 297 ரன்கள் குவித்திருந்தார்.
இதைப்போன்று சேவாக்கின் இளைய மகனான வேதாந்தும் டெல்லி 16 வயது உட்பட்ட அதற்கான அணியில் விளையாடி வருகிறார். அவரும் இந்த டெல்லி பிரிமியர் லீக் தொடரில் இடம் பிடித்திருக்கிறார். கடந்த முறை 6 அணிகள் பலப்பரிசை நடத்திய நிலையில் இம்முறை இரண்டு புதிய அணிகள் சேர்ந்து மொத்தம் எட்டு அணிகள் விளையாடுகிறது