கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. தோல்வியை சந்திக்காத இந்திய அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் மிகவும் சிறிய அளவில் இருக்கும் என்பதால் 350 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

இதனை கருத்தில் கொண்டு இந்திய அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாட முற்பட்டனர். ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்களும், கில் 23 ரன்களிலும் ஆட்டம் இழக்க இந்திய அணி 93 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய 35 வது பிறந்த நாளில் இன்று விளையாடுகிறார்.
இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் தொடர் வெற்றியை சிலர் பொறுத்துக் கொள்ள முடியாமல் பிசிசிஐ மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆட்டத்தில் 20 புள்ளி 1வது ஓவரில் கேசவ் மகாராஜ் வீசிய பந்து அடிக்க முற்பட்டபோது அது கேட்ச் ஆனது. இதற்கு தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அவுட் கேட்க நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். இதனை அடுத்து கேசவ் மஹராஜ் டிஆர்எஸ் உதவி நாடும் படி கேட்டார்.

இதனையடுத்து ரீப்ளேவில் பந்து விராட் கோலியின் பேட்டில் பட்டதா என பார்க்கப்பட்டது. அப்போது பந்து பேட்டில் படவில்லை. ஆனால் பேட் காலில் பட்டது. இப்படித்தான் முதல் ரீப்ளேவில் காண்பிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது ரீப்ளேவில் ஸ்னிக்கோ மீட்டரில் எதுவுமே படவில்லை என்பது போல் காட்டப்பட்டது. இதனை அடுத்து மூன்றாவது நடுவரும் இதற்கு அவுட் தர மறுத்துவிட்டார். பந்து பாட்டில் படாத நிலையில் சிலர் விராட் கோலிக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டி வருகின்றனர்.