இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நியூசிலாந்துக்கு எதிரான 10வது சதமாகும். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இந்தூரில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டேரல் மிட்செல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் சதத்தை பூர்த்தி செய்தனர். இதனால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

ரோகித் சர்மா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 91 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனான கோலி, தற்போது நியூசிலாந்துக்கு எதிராக ஒட்டுமொத்த ஒருநாள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் என இரு வடிவங்களிலும் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக அவர் அடித்த முந்தைய சதம், 2023 நவம்பர் மாதம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 117 ரன்கள் எடுத்தபோது ஆகும்.2023 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தனது 50வது ஒருநாள் சதத்தை அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் அதிக ஒருநாள் சதங்கள் சாதனையை கோலி முறியடித்தார்.
இதே போன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 3வது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலி (7 சதம்), வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (தலா 6 சதம்) ஆகியோரை விட முன்னிலையில் உள்ளார்.