இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், விராட் கோலியின் சதம் வீணானது அவருக்கு மிகுந்த வருத்தத்தைத் தரும் என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்தார். தொடர் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய அணி 338 ரன்கள் இலக்கை துரத்தியது.
ஆட்டத்தின் 13வது ஓவரில் 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இருப்பினும், சிறப்பான ஃபார்மில் இருந்தகோலி, மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும் ரன் வேகத்தைப் பராமரித்து தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 108 பந்துகளில் 124 ரன்கள் எடுத்திருந்த அவர், ஆட்டமிழக்க இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வெற்றியைத் தவறவிட்ட கோலியின் சதம் குறித்து பேசிய ஜாகீர் கான், "கோலி போன்ற ஒரு சிறந்த பேட்டர் களத்தில் இருந்தவரை, வெற்றி நம்பிக்கை இருந்தது. சேசிங்கில் அவரது வலிமை உலகறிந்தது. அவருக்குத் தேவை ஆதரவு மட்டுமே. விராட் அணிக்கு அதை கிட்டத்தட்ட பெற்றுத் தந்துவிட்டார், வெற்றிக் கோட்டைத் தாண்டாத வருத்தம் அவருக்குள் கண்டிப்பாக இருக்கும்," என்று குறிப்பிட்டார்.
கோலி நிச்சயம் மனமுடைந்திருப்பார் என்ற ஜாகீர் கானின் கருத்தை, முன்னாள் இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானேவும் ஒப்புகொண்டார். தொடர்ந்து பேசிய ரஹானே, "இந்தியா நான்கு விக்கெட்டுகளை இழந்த பிறகு, நித்திஷ் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணாவுடன் அழகாகப் பேட் செய்தார். அவர் மனமுடைந்திருப்பார்," என்றார்.
"ஆறு ஓவர்களில் 60-க்கும் மேற்பட்ட ரன்கள் தேவைப்பட்டபோது, அது இந்தியாவின் ஆட்டமாக இருந்தது. ஆனால் விராட் அவுட்டானதும், ஆட்டம் நியூசிலாந்தின் பக்கம் சென்றது," என்றார். இத்தோல்வி, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா சந்தித்த முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் தோல்வியாகும். கடந்த மூன்று இருதரப்புத் தொடர்களில் இது இந்தியாவின் இரண்டாவது தோல்வி.
33 ஓவரில் 178 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி தடுமாறியபோது, எட்டாம் நிலை மட்டைவீரராக ஹர்ஷித் களமிறங்கினார். அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, 43 பந்துகளில் 52 ரன்கள் அடித்து Innings-ஐ மீட்டெடுத்தார்.
ஹர்ஷித் ராணா குறித்து பேசிய ஜாகீர் கான், "ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தவறினார். ஆனால் லோயர் ஆர்டர் வீரர் செய்ய வேண்டியதை விட, ஹர்ஷித் ராணா செய்துகாட்டினார். உண்மையில், அவர் எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாகச் செயல்பட்டார். இந்திய அணியை நிலைநிறுத்தி, விராட் கோலிக்கு நம்பிக்கையையும் அளித்தார்," என்று குறிப்பிட்டார்.
கோலியும் ஹர்ஷித்தும் ஏழாவது விக்கெட்டுக்கு வெறும் 69 பந்துகளில் 99 ரன்கள் குவித்து, இந்தியாவை வெற்றிக்கு 61 ரன்கள் நெருங்கச் செய்தனர். எனினும், அடுத்த மூன்று ஓவர்களில் இருவரும் ஆட்டமிழக்க, இந்தூர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
"ஹர்ஷித் அவுட்டானதும், அனைத்துப் பொறுப்பும் விராட் மீது விழுந்தது. அவர் ஸ்ட்ரைக்கை வைத்துக்கொண்டு, புள்ளிவிவரங்களையும் கணக்கிட வேண்டியிருந்தது, இது சவாலாகவே இருந்தது. பந்து பேட்டில் அடிக்கக்கூடிய நிலையில் இருந்தபோதும், அந்த போட்டியில் அவர் அதைச் செய்யத் தவறினார்," என்று ஜாகீர் கான் தெரிவித்தார்.