விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் நட்சத்திர வீரரான விராட் கோலி தொடர்ந்து இரண்டு சதம் அடித்து அசத்தினார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் இந்த தொடரில் விராட் கோலி 302 ரன்கள் அடித்திருந்தார்.
இதனால் விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது. விராட் கோலி 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு கம்பீர் முட்டுக்கட்டை போடும் விதமாக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக விராட் கோலிக்கும் கம்பீருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இந்திய அணி வெற்றி பெற்றவுடன் மறுநாள் விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர்.
வெள்ளை நிற ஆடையுடன் கோவிலுக்கு வந்த விராட் கோலிக்கு துண்டு அணிவிக்கப்பட்டு கோயில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து விராட் கோலி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அப்போது அங்கு இருந்த பூசாரிகள் கோயில் தூண் ஒன்றை கட்டிப்பிடித்து, நீங்கள் மனதில் நினைக்கும் காரியத்தை வேண்டினீர்கள் என்றால் அது நிச்சயம் கைகூடும் என்று கூறினார்கள்.
இதை கேட்டவுடன் விராட் கோலி கோயில் துணை கட்டிபிடித்து மனதார சில வினாடிகள் வேண்டுதல் செய்தார். அதன்பின் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு கோயிலில் இருந்து புறப்பட்டார். விராட் கோலி உடன் அவரது குடும்பத்தினர் சிலரும் இந்த கோயிலுக்கு வந்திருந்தனர்.
விராட் கோலி தவிர தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரும் இந்த கோயிலில் தரிசனம் செய்தார்.விராட் கோலி அடுத்ததாக விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பங்கேற்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதன் பின் ஜனவரி மாதத்தில் வரும் 11ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. அதில் விராட் கோலி பங்கு பெறுவார்.