போர்ட் ஆப் ஸ்பெயின்: பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ள அனில் கும்ப்ளேவின் முடிவை தாம் மதிப்பதாக கேப்டன் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
கோஹ்லிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையேயான மோதலின் உச்சகட்டமாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார் கும்ப்ளே.
கேப்டன் விராட் கோஹ்லிக்கு தன் பயிற்சி அணுகுமுறையில் முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிந்த பிறகு பதவியில் தொடர்வது சரியல்ல என்றும் தனது பயிற்சியாளர் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
எனினும் விராத் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதலால் தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கோஹ்லி, கும்ப்ளே எடுத்திருக்கும் முடிவை மதிக்கிறோம். அவரது பங்களிப்பில் யாரு்க்கும் மாற்றுக்கருத்து இருப்பதாக கூறமுடியாது.
கும்ப்ளே உடன் அப்படி என்ன கருத்து வேறுபாடு உள்ளது? இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என்பன உள்ளிட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அணியினர் தங்கும் அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை நான் வெளியே பொது இடத்தில் பேசமாட்டேன். சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது 11 முறை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அறைக்குள் நடந்த அணியின் அந்தரங்கமான விஷயங்களை வெளியிட்டதில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இதை ஒரு வழக்கமாக்கியுள்ளோம் என்று கூறினார்.