மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக கருதப்படும் விராட் கோலி தற்போது கிரிக்கெட் தவிர மற்ற விஷயங்கள் குறித்து முதல் முறையாக தனது மனதை திறந்து பேசி இருக்கிறார்.
கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை உடைத்து கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி தற்போது உலக கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறார். இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விராட் கோலி பேசிய வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் சிறுமி ஒருவர் விராட் கோலி பேட்டி எடுத்தார். அதில் விராட் கோலி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். என் வாழ்க்கையில் எனக்கு மிகப்பெரிய ரோல் மாடல் எனது மனைவி தான். என் மனைவி இடம் இருக்கும் நம்பிக்கை தைரியம் கடின உழைப்பு ஆகியவற்றை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். கிரிக்கெட்டில் நான் பல சாதனைகளை செய்திருக்கிறேன்.
கிரிக்கெட் வெளியே நான் செய்ய நினைப்பது நிறையாக இருக்கிறது. என்னால் முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு உபயோகமான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.இப்போது எனக்கு 35 வயதாகிறது 50 வயதில் நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.
அது குறித்து நான் இப்போது எதுவுமே திட்டமிடவில்லை. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் எந்த பணியை செய்தாலும் அதை முழு மனதுடன் செய்யுங்கள்.
நீங்கள் செய்யும் பணியை காதலியுங்கள். தவறான எண்ணத்தில் நீங்கள் ஒரு காரியத்தை செய்ய நினைத்தால் அது நிச்சயமாக வெற்றி பெறாது. நீங்கள் செய்யும் விஷயங்களுக்கு உங்களை நீங்களே அர்ப்பணியுங்கள் 100% அர்ப்பணிப்போடு நீங்கள் செய்யும் அனைத்து பணியுமே நிச்சயம் வெற்றிகரமாக தான் முடியும். கடவுளும் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வார் என்று விராட் கோலி கூறியுள்ளார்.