ஆன்டிகுவா: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 143 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
கோஹ்லி தலைமையிலான, இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் நாட்டில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி, நேற்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு, ஆண்டிகுவாவில் தொடங்கியது. இப்போட்டியில், 5 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியுள்ளது இந்திய அணி.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முரளி விஜய், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் 26 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் கேப்ரியல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த புஜாரா 16 ரன்னில் அவுட் ஆகினார். ரகானே 22 ரன்னில் வெளியேறினார். விராட் கோஹ்லியும், தவானும் பொறுப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். தவான் 84 ரன்கள் எடுத்த போது எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 302 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளது. விராட் கோஹ்லி 143 ரன்களுடனும், அஸ்வின் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்து விராட் கோஹ்லி சாதனை படைத்தார். இதன் மூலம் 3000 ரன்களை கடந்த 19 வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.