
இரண்டாம் இன்னிங்ஸ்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா, 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் சேர்த்தது. அதாவது இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது.

ரஹானே பூஜ்யம்
இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ரவீந்திர ஜடேஜா க்றிஸ் வோக்ஸ் ஓவரில் 17 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பிறகு களமிறங்கிய துணை கேப்டன் ரஹானே வழக்கம் போல் தன் வேலையைக் காட்டினார். 8 பந்துகளை சந்தித்த ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரும் க்றிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பிறகு கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ரிஷப் பண்ட். அப்போது, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மொயீன் அலியை பந்து வீச அழைத்தார். இதற்கு உடனடி பலன் கிடைத்தது.

ஏமாந்த கோலி
கிரெய்க் ஓவர்டன் மட்டும் ஸ்லிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். மொயீன் அலி பந்தை ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீச, அதனை தன் பேட் கொண்டு டிஃபன்ட் செய்தார் கோலி. பந்து காலிப் பேட்டில் பட்டு மிக பதுசாக ஓவர்டன் கைகளில் தஞ்சமடைந்தது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டார்களில் ஒருவரான விராட் கோலியின் விக்கெட் மிக மிக கேஷுவலாக கிடைக்க, இங்கிலாந்து கொண்டாடித் தீர்த்தது. ஏற்கனவே, கடைசி இரண்டு நாளில் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், விராட் கோலி அதன் முதல் சாட்சியாக அமைந்திருக்கிறார். கோலி விக்கெட்டுக்கு பிறகு மொயீன் அலி தொடர்ந்து பந்து வீசி வருகிறார். இதில், முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூருக்கு கூட இங்கிலாந்து டிஆர்எஸ் கேட்டது. நல்ல வேளை அவர் அவுட்டாகவில்லை. அடுத்த ஒன்றரை நாளுக்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கு மிக முக்கியமான பணிகள், கடமைகள் காத்திருக்கின்றன.

ஸ்பின் ஆதிக்கம்?
இந்திய அணியின் கைவசம் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ளன. ரிஷப் பண்ட்டும், ஷர்துல் தாகூர் களத்தில் உள்ளனர். மிஞ்சிப் போனால், இன்னும் மேற்கொண்டு 50 ரன்கள் அடித்தாலே அது மிகப்பெரிய விஷயம் தான். அப்படி ஒருவேளை அடித்தால், இங்கிலாந்துக்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கலாம். அப்போது, ரவீந்திர ஜடேஜாவின் பங்கு இந்தியாவுக்கு அதிகம் தேவைப்படும், இப்போது பிட்ச் மெதுவாக ரியாக்ட் ஆகிறது. வெயில் அதிகமாக உள்ளது. அங்கு மதியத்துக்கு மேல் இன்னும் வெய்யில் அதிகமாகும். அது, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை நிச்சயம் சோர்வடையச் செய்யும். ஸோ, ஃபாஸ்ட் பவுலர்களால் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. அப்போது கோலிக்கு கைக்கொடுக்க இருப்பவர் ஜடேஜா ஒருவர் மட்டுமே. இதனால் தான், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், "இந்திய அணி அஷ்வினை தேர்வு செய்யாததை நினைத்து வருத்தப்படும்" என்று இந்த டெஸ்ட் மேட்ச் தொடங்கும் முன்பு கூறியிருந்தாரோ!!?


Click it and Unblock the Notifications











