ஒரே ஒரு விளம்பர ஒப்பந்தம்தான்.. கோஹ்லி ஃலைப் செட்டில்
பெங்களூர்: ஒரே நிறுவனத்துடன் ரூ.100 கோடி மதிப்புக்கு அதிகமாக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனான விராட் கோஹ்லி, 3 வகை போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச விளையாட்டு உபகரண நிறுவனமான பூமா, விராட் கோலியை 8 ஆண்டுகளுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஒரே விளம்பரத்தில் இத்தனை கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பூமா விளம்பர தூதர்
28 வயதாகும் கோஹ்லி, தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பூமாவின் விளம்பர தூதராகவே இருக்க வேண்டிவரும் என்பது இதில் கவனிக்கத்தக்கது. பொதுவாக இவ்வளவு நீண்ட ஒப்பந்தத்தை கிரிக்கெட் வீரர்களுடன் எந்த நிறுவனமும் செய்வதில்லை. ஆனால் கோஹ்லியின் ஃபிட்னசை கருத்தில் கொண்டு, பூமா இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது.

ஜாம்பவான்கள்
இந்த ஒப்பந்த தொகை ஆண்டு வாரியாக பிரித்து கொடுக்கப்படும். அதாவது, கோஹ்லிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.12 கோடி கிடைக்கும். ஏற்கனவே உசேன்போல்ட், பீலே, மரடோனா போன்ற விளையாட்டு ஜாம்பவான்களுடன் பூமா ஒப்பந்தம் செய்திருந்தது.

பல நிறுவனங்கள்
இதற்கு முன்னதாக சச்சின், டோணி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பல விளம்பர நிறுவனங்களில் சேர்ந்து தான் ரூ.100 கோடிக்கு மேல் ஒப்பந்தமாகி இருந்தனர். கிட்டத்தட்ட 24 வருடங்கள் ஆடிய சச்சின் 50 விளம்பரங்கள் மூலம் ரூ. 500 கோடிக்கு மேல் ஒப்பந்தமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் டோணியும் பல விளம்பரங்கள் மூலம் ரூ.180 கோடிக்கு மேல் ஒப்பந்தமாகி இருந்தார்.

கோஹ்லி ஹேப்பி
ஜெர்மனியைச் சேர்ந்த பூமா நிறுவனம் கோஹ்லியின் புகழை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளிலும் பயன்படுத்தி தனது லைஃப்ஸ்டைல் தயாரிப்புகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதுபற்றி, கோஹ்லி கூறுகையில், இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள உசைன் போல்ட், அசாபா பவுல் மற்றும் தியர்ரி ஹென்றி உள்ளிட்ட வீரர்களுடன் இணைவது மகிழ்ச்சி என்றார்.


Click it and Unblock the Notifications