மும்பை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட்டை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான டேவிட் லயாட் கூறி இருக்கிறார். கடந்த ஆறு மாதமாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பி வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிராக மூன்றுக்கு பூஜ்ஜியம் என தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வி என இந்திய அணி தடுமாறி வருகிறது. இதற்கு காரணம் இந்திய அணி பேட்டிங் சரியாக இல்லாததுதான் என்று கூறப்படுகிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டேவிட் லயாட், விராட் கோலி தமது சிறந்த பேட்டிங் காலகட்டத்தை தாண்டி சென்று விட்டார் என்று உணரத் தொடங்கி இருப்பார். இது நிச்சயம் அவருக்கு வழியை கொடுக்கும்.
கோலி, இங்கிலாந்துக்கு வரும் போது அவருக்கு என்ன திட்டம் தீட்டப்பட்டு இருக்கும் என்று நிச்சயம் தெரியும். ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் போது ஸ்லிப்பில் அவர் ஆட்டம் இழப்பார். கோலிக்கு தற்போது 36 வயதாகி விட்டது. தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.
விராட் கோலி, கிரிக்கெட் விளையாடியதிலேயே மிக சிறந்த வீரர்களில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இது எல்லாம் கடந்த காலமாகிவிட்டது. எனவே தேர்வு குழுவினர் இதை புரிந்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர் கம்பீரும் விராட் கோலி முகத்திற்கு நேராக உங்களுடைய நேரம் முடிந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.
இதனால் சீனியர் வீரர்கள் பின்னால் செல்லாமல் இந்திய அணி திறமை வாய்ந்த இளம் வீரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகளவு வாய்ப்பு வழங்க வேண்டும். இந்திய அணி விரைவாக அடுத்த சச்சின், டிராவிட் போன்ற வீரர்களை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என்று டேவிட் லயாட் கூறியுள்ளார். இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து சென்று ஜூன் மாதம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.