தோனிக்கு மாற்று வீரர்
உலகக்கோப்பை தொடருக்கு சில மாதங்கள் முன்பு இருந்தே டெஸ்ட் அணியில் தொடங்கி, டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து ஆடி வந்தார் ரிஷப் பண்ட். தோனி தற்போது அணியில் இடம் பெறாத நிலையில், ரிஷப் பண்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அறியப்பட்டார்.
டெஸ்ட் சாதனை சதங்கள்
ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் பண்ட் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும், டெஸ்ட் போட்டியில் தோனி கூட செய்யாத சாதனை ஒன்றை செய்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாட்டில் சதம் அடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் பண்ட் மட்டும் தான்.
மொத்தமாக பார்ம் அவுட்
அதன் காரணமாகவே ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்த பண்ட் உலகக்கோப்பை தொடரில் இருந்தே சரியாக ரன் குவிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மூன்று வித கிரிக்கெட் தொடர்களிலும் சேர்த்து 10 இன்னிங்க்ஸ்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
கடும் விமர்சனம்
அதனால், ரிஷப் பண்ட் மீது கடும் விமர்சனம் எழுந்தது. வெளியில் இருந்து எழுந்த விமர்சனம் ஒருபுறம் என்றால், அணியின் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படையாக ஒரு பேட்டியில் ரிஷப் பண்ட்டை காய்ச்சி எடுத்து விமர்சித்து இருந்தனர்.
ஒருநாள், டி20 வாய்ப்பு
தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக அவர்கள் அளித்த பேட்டியில் பண்ட்டுக்கு இன்னும் ஒரு சில வாய்ப்புகள் தான் கிடைக்கும் என கூறி இருந்தனர். அதன்படி டி20 தொடரின் இரண்டு போட்டிகளில் அவர் 4 மற்றும் 19 ரன்கள் தான் எடுத்தார்.
டெஸ்டிலும் பாதிப்பு
அதனால், அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பு பறிபோகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெஸ்ட் அணியிலும் அவரை நீக்க கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தேர்வுக் குழுவினர் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வுக் குழு முடிவு
தேர்வுக் குழுவினர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருப்பதால், அவருக்கு தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் மட்டும் வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம். சரியாக ஆடவில்லை என்றால் அவரை நீக்கலாம் என கூறி உள்ளது.
மறுத்த கேப்டன்
ஆனால், கேப்டன் கோலி மற்றும் ரவி சாஸ்திரி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்டில் இருந்தே அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்து என்ன?
ரிஷப் பண்ட் இனி உள்ளூர் போட்டிகளில் ஆடி தன்னை நிரூபித்து தான் அணிக்கு திரும்ப வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் கூட ஆகலாம். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு ரிஷப் பண்ட்டுக்கு கிடைத்தும் அதை தவறவிட்டுள்ளார்.
அடுத்த கீப்பர் யார்?
டெஸ்ட் அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்பு இன்றி காத்திருக்கும் விரிதிமான் சாஹாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அவர் காயம் காரணமாக ஜனவரி 2018 முதல் இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார். தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.