
வங்கதேசத்திற்கு எதிராக
கடைசியாக, 2019ம் ஆண்டு, இந்தியாவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தார். அதன் பிறகு, இப்போது வரை அவர் செஞ்சுரி அடிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேல், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பேட்டிங்கில் படாதபாடு பட்டு வருகிறார் விராட் கோலி. ஸ்டேடியத்தில் களமிறங்கி முதல் ரன்னை அடிப்பதற்குள்ளே அவர் மூச்சு வாங்கிவிடுகிறார். எப்போதும், விராட் கோலியிடம் பேட்டிங்கில் ஒரு அழகிய "திமிர்த்தனம்" இருக்கும். அது இந்த தொடரில் டோட்டலாக மிஸ்ஸிங். பயப்படுகிறார். இங்கிலாந்து பவுலர்களை எதிர்கொள்ள அவர் அச்சப்படுவதாகவே தெரிகிறது. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே அவர் 124 ரன்கள் தான் அடித்திருக்கிறார். ஆவரேஜ் 24.80. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் தான் அரை சதம் அடித்தார். ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் இரு முறை, ஓலே ராபின்சனிடம் இருமுறை மற்றும் சாம் கர்ரன் ஒருமுறை என்று அவுட்டாகி இருக்கிறார் கோலி.

ரசிகர்களே காரணம்
இந்நிலையில், விராட் கோலியின் இந்த தடுமாற்றத்துக்கு முக்கிய காரணம் அவரது தோளில் ஏற்றப்பட்டிருக்கும் அதிகபட்ச சுமை என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட்டின் கேப்டனும் அவர் தான். இதனால், எந்த போட்டியாக இருந்தாலும், இந்தியாவும் ஜெயிக்க வேண்டும், அவரும் ரன்கள் அடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தியா ஒரு ஆட்டத்தில் வெற்றியோ, தோல்வியோ அடைகிறது என்று வைத்துக் கொள்வோம். போட்டி முடிந்த பிறகு போடப்படும் ஸ்கோர் கார்டில், அனைவரது கண்களும் மொய்ப்பது விராட் கோலி எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார் என்பதைத் தான். அணியில் வேறு எத்தனை ஸ்டார் வீரர்கள் விளையாடினாலும், முதலில் அனைவரும் தேடுவது கோலிக்கு நேராக இடம் பெற்றிருக்கும் ரன்கள் எவ்வளவு என்பதைத் தான். அந்த இடத்தில் எப்போதும் கணிசமான ரன்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதுதான் விராட் கோலியின் பிரஷராக மாறுகிறது. அதே போட்டியில், வேறொரு வீரர் சதம் அடித்திருப்பார். ஆனால், அதைப் பற்றி பேசுவோரை விட, ஏன் கோலி அடிக்கவில்லை என்று பேசுவோரின் எண்ணிக்கை தான் அதிகம். இதுதான் விராட் கோலியின் பிரஷர். அவரும் அடிக்கணும், டீமும் ஜெயிக்கணும், இது எப்போதும் நடக்கணும். இதுதான் நாம் விராட் கோலி மீது வைக்கும் பிரஷர்.

கிரண் மோரே
இந்த நிலையில் தான், ஸ்பிலிட் கேப்டன்சி பற்றி பலரும் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர். அதாவது, ஒவ்வொரு வடிவ கிரிக்கெட்டுக்கு ஒவ்வொரு கேப்டன்கள் என்ற ஃபார்முலாவை இந்தியாவும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு. சமீபத்தில் ஒரு பேட்டியின் போது பேசிய முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே, "இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு கேப்டன் என்ற அணுகுமுறையை நோக்கி நகர்வதாக நான் நினைக்கிறேன். இதனால், ரோஹித் ஷர்மாவுக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். விராட் கோலி, முன்னாள் தலைவர் தோனி தலைமையில் விளையாடிய ஒரு புத்திசாலி கேப்டன். கோலி, ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு இன்னும் எவ்வளவு காலம் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது குறித்து கோலியும் சிந்திப்பார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்த முடிவுகளைப் பற்றி நீங்கள் அதிகம் விவாதிப்பீர்கள். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் கேப்டன்களாக உள்ளனர். ஆஸ்திரேலியாவில், டிம் பெய்ன் மற்றும் ஆரோன் ஃபின்ச் கேப்டன்களாக செயல்படுகின்றனர்.

ஒரு காலம் வரும்
இதேபோன்ற அணுகுமுறை இந்தியாவில் ஒர்க் அவுட் ஆகும். இந்தியாவில் இந்த அணுகுமுறை எடுபடும். இந்திய அணியின் எதிர்காலம் குறித்து சீனியர் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. விராட் கோலி, மூன்று வடிவ இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் சிறப்பாகவும் விளையாட வேண்டும். அது அவ்வளவு எளிதானது அல்ல. எனினும், கேப்டனாகவும், தனி வீரராகவும் அவர் வெற்றிப் பெறுவதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விராட் கோலி ஒரு நாள், 'இது போதும், ரோஹித் அணியை வழிநடத்தட்டும்' என்று சொல்லும் ஒரு காலம் வரும் என்று நான் நினைக்கிறேன்" என்று மோரே கூறியிருந்தார். இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பே, அவர் இதுகுறித்து பேசியிருந்தார். குறிப்பாக அவர், "இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்த முடிவுகளைப் பற்றி நீங்கள் அதிகம் விவாதிப்பீர்கள்" என்று சொன்னது தான் மிக மிக முக்கியமான விஷயமாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

வீரராக விளையாடினால்
டெஸ்ட் கிரிக்கெட்டில், அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாக இருக்க, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் துணை கேப்டனாக செயல்படுகிறார். குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸி., மண்ணில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா மெகா தோல்வி அடைய, ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி, ரோஹித்தும், டி20 போட்டிகளில் தலைசிறந்த கேப்டனாக செயல்படுகிறார். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. எனவே, கோலி ஒருநாள் தொடருக்கு மட்டும் கேப்டனாக செயல்படலாம் என்றும், டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு வீரராக மட்டும் விளையாடினால், அவருக்கும் நல்லது, அணிக்கும் நல்லது என்ற கருத்துக்கள் மீண்டும் வலுப்பெற தொடங்கியுள்ளன. (அடுத்த போட்டியில் வென்றால், இந்த கருத்துக்கள் மீண்டும் வலுவிழந்து போகும் என்பது வேறு விஷயம்!).


Click it and Unblock the Notifications