விசாகபட்டினம்: விசாகபட்டினத்தில் நடைபெற்ற, 2வது டெஸ்ட் போட்டியில் 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் கோஹ்லி போட்டிக்கு பிறகு கூறியதாவது:
இந்த போட்டியில் கிடைத்த பாசிட்டிவ் அம்சம் என்னவென்றால், முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்களுமே சிறப்பாக செயல்பட்டனர். ஜெயந்த் யாதவும் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

முதல் இன்னிங்சில் ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டையும், 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உதவினார். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார் என்றார் கோஹ்லி.
ஜெயந்த் யாதவ் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், பேட்டிங்கிற்கு கஷ்டமான 2வது இன்னிங்சில் அவுட் ஆகாமல் 27 ரன்களும் எடுத்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமாக உயர உறுதுணையாக இருந்தார்.
கோஹ்லி மேலும் கூறுகையில், ஜெயந்த் யாதவ் தனது டெஸ்ட் வாழ்க்கையை சிறப்பாக தொடங்கியுள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. எந்த இடத்தில் ஃபீல்டரை நிறுத்த வேண்டும் என கூறிவிட்டு அதற்கு ஏற்ப பந்தை வீசினார் ஜெயந்த் யாதவ். எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும் என்ற வித்தை தெரிந்தவராக உள்ளார் ஜெயந்த்.
இந்த போட்டியில் அவரது பங்களிப்பு விலை மதிக்க முடியாதது என்றார் விராட் கோஹ்லி. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் சதமும், இரண்டாவது இன்னிங்சில் அரை சதமும் விளாசியதற்காக மேன் ஆப் தி மேட்ச் விருதை கோஹ்லி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.