தண்ணி காட்டிய பண்ட்
முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் பேட்டிங் சுமாராக இருந்தாலும், பவுலிங்கில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஷமி தனது தரத்தை நிரூபித்தார். ஆனால், உலகின் டாப் பவுலரான பும்ரா, சீனியர் வீரரான இஷாந்த் ஆகியோர் பவுலிங்கில் எந்த தாக்கமும் இல்லை. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைய, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், கடைசி வரை தண்ணி காட்டிவிட்டு சென்றார். இறுதிக் கட்டத்தில் அவரால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இந்திய வீரர்கள் ஆட்டம். புஜாரா, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஷுப்மன் கில் என்று அனைவரது ஆட்டமும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கேப்டன்ஷிப் கேள்வி
இது எல்லாவற்றுக்கும் மேலாக, விராட் கோலி பேட்டிங்கிலும் ஒன்றும் செய்யவில்லை. கேப்டன்சியிலும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. இதனால், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. ஏற்கனவே ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கு என தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்து வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி கோலிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், முன்னாள் தேர்வாளர் சரன்தீப் பி.டி.ஐ யிடம் பேசுகையில், "நீங்கள் இனி ஹர்திக்கை மட்டுமே நம்ப முடியாது. அவர் எல்லா வடிவங்களிலும் எப்போது பந்து வீசுவார் என்று உங்களுக்குத் தெரியாது, எனவே ஷர்துல் போன்ற ஒருவர் அல்லது விஜய் ஷங்கர் அல்லது ஷிவம் துபே போன்றோரை இந்திய அணி நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இவர் போகிற போக்கில் இந்த கருத்தை தெரிவித்தாலும், இந்திய அணியின் ஆலோசனை கூட்டங்களில் யாரை ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக தேர்வு செய்ய வேண்டும் என்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
டீசண்ட் ஹிட்டர்
ஹர்திக் பாண்ட்யா அணியில் இல்லாததால் தான், ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டு, இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத்தனைக்கும், பிட்ச் ஸ்விங்கிற்கு ஒத்துழைக்கும் என்று மேட்சுக்கே முன்பே தெரிவிக்கப்பட்ட நிலையிலும் ஷர்துலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓரளவு டீசண்ட்டான ஹிட்டர் + பவுலர் என்பதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை சில போட்டிகளில் சேர்க்க வாய்ப்புள்ளது எனலாம்.
ஃபார்ம் இருக்கா?
அதேசமயம், தமிழக வீரர் விஜய் ஷங்கர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. திறமை இருக்கும் நல்ல ஆல் ரவுண்டர். ஆனால், தமிழக லெவல் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் ஷங்கர், சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் திணறி வருகிறார். எனினும், அவர் திறமை மீது அபார நம்பிக்கை இருக்கிறது. 2019 உலகக் கோப்பைத் தொடரில், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அம்பதி ராயுடுவை புறக்கணித்துவிட்டு, விஜய் ஷங்கரை '3டி' பிளேயர் எனும் அடையாளத்துடன், விளக்கத்துடன் இங்கிலாந்து அழைத்துச் சென்றது பிசிசிஐ. ஆனால், விஜய் ஷங்கரால், பெரிதாக எந்த இன்னிங்ஸும் விளையாட முடியவில்லை. குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும், இம்மியளவு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலும் அவரால் சரியாக விளையாட முடியவில்லை. இதனால், ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனில், இந்த சீசனில் சில போட்டிகளில் இருந்து நீக்கப்படும் அளவுக்கு அவரது நிலைமை மோசமானது.
கிளம்பும் 3டி வீரர்?
இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்ட்யா காயம், இந்திய அணியின் இறுதிப் போட்டி தோல்வி, ஷர்துல் தாகூர் மீது ஒரு ஓரத்தில் நிலவும் அவநம்பிக்கை போன்றவை விஜய் ஷங்கருக்கு பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் தனது விருப்பத்தை கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், விஜய் ஷங்கரை சேர்ப்பதற்கு விராட் கோலி ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. எனவே, அவர் எந்த நேரத்திலும், இங்கிலாந்து அழைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.