பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் மூத்த வீரர் விராட் கோலி, புதன்கிழமை (ஜூன் 4) பெங்களூருவில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சோக நிகழ்வுகள் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது குறித்து கோலி தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.
2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பை வென்ற நிலையில் ஆதை கொண்டாட முடிவு செய்தது அந்த அணி நிர்வாகம். அதற்காக பெங்களூருவில் திறந்தவெளி பேருந்து ஊர்வலம் மற்றும் சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அந்த நிகழ்ச்சியை நேரில் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதான வாயிலின் வெளியே குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையுடன் ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்டார். "சொல்ல வார்த்தைகள் இல்லை. முற்றிலும் வேதனை அடைந்தேன்," என்று கோலி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆர்சிபி மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளன. கர்நாடக மாநில அரசு 10 லட்சம் ரூபாய் அளிக்க உள்ளது.
இந்த கோர சம்பவம் நடந்த பிறகும் ஆர்சிபி அணி நிகழ்ச்சியை தொடர முடிவு செய்தது குறித்து ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் ஐபிஎல் தலைவர் அருண் துமால் , மைதானத்திற்குள் இருந்த அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் குறித்து தெரியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்த கோர சம்பவம் நடந்த பிறகு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் விராட் கோலி பேசினார். அவர் மைக் பிடித்தவுடன் ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். "எனக்கு அதிக நேரம் இல்லை. எங்கள் கேப்டன் (ரஜத் படிதார்) கூறியதை நான் மீண்டும் கூறுகிறேன். இனி 'ஈ சாலா கப் நம்டே' இல்லை. அது 'ஈ சாலா கப் நம்மது'."
"நாங்கள் இதைச் செய்துவிட்டோம், இந்த வெற்றி எனக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் தான். ஆதரவளித்த ரசிகர்களுக்கும், மக்களுக்கும். இது உங்களுக்காகவே. நீங்கள் பல ஆண்டுகளாகக் காட்டிய நம்பிக்கையும் அன்பும் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. உங்களைப் போன்ற ரசிகர் பட்டாளத்தை நான் இதுவரை பார்த்ததில்லை," என்று கோலி கூறினார்.