மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
தொடர்ந்து ஒரே மாதிரி கோலி அவுட் ஆனதால் ரசிகர்கள் விரக்தி அடைந்து இருக்கிறார்கள். இந்த சூழலில் விராட் கோலி களத்தில் 19 வயது வீரரான ஷாம் கோன்ஸ்டாசிடம் மோதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விராட் கோலியின் செயலால் இந்திய அணி வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டதாக முன்னாள் இந்திய அணி கேப்டன் கவாஸ்கர் சாடி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், 19 வயது வீரர் கோன்ஸ்டாஸ் உடன் கோலி மோதினார். அது கிரிக்கெட்டே கிடையாது. யாராவது நம்மை கோபப்படுத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் தயங்க மாட்டார்கள்.
ஆனால் பதிலடி கொடுப்பது என்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நீங்கள் செய்தது ஒரு பதிலடி கிடையாது. ஒவ்வொரு வீரர்களும் போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் மனதை வெல்ல முயற்சி செய்வார்கள். தங்களுடைய நேரத்தை நல்ல முறையில் செலவழிக்க தான் ரசிகர்கள் வருகிறார்கள். எனவே வீரர்களுக்கு எதிராக எதிர்ப்பு குரல் கொடுப்பதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.
ரசிகர்கள் இப்படி செய்கிறார்கள் என அதற்கு நாம் பதிலடி கொடுப்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. இது மேலும் பிரச்சனைகளை தான் உண்டாக்கும். ரசிகர்கள் இப்படி செய்கிறார்கள் என விராட் கோலி அவர்களுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு ஒட்டுமொத்த அணியையும் கூடுதல் நெருக்கடிக்கு ஆளாக்கிறார்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த இந்திய அணியையும் பார்வையாளர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். விராட் கோலி தொடர்ந்து ஒரே மாதிரி ஆட்டம் இழந்து வந்தார். இதன் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வதற்கு விராட் கோலி எந்த ஒரு செயலையும் செய்ய முடியவில்லை. எனவே கோலி இதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.