நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை
ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், யூஏஇயில் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேதி குறித்தவற்றில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இன்று கூடும் ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் ஐபிஎல் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
முன்னேற்பாட்டில் விராட் கோலி
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ஐபிஎல்லின் அணிகள் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளன. இதையொட்டி அணிகள் அனைத்தும் தங்களை தயார் படுத்தி வருகின்றன. இந்நிலையில், தன்னுடைய அணியின் பயணத்தையொட்டி முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி.
தயாராகும் ஆர்சிபி அணி
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் 5 பேட்கள், சிவப்பு நிற பேட்கள் போன்றவை பேக் செய்ய்பபட்டு காணப்படுகிறது. மேலும் விரல்கள் கிராஸ் செய்யப்பட்ட மற்றும் லவ் சிம்பள்களும் அவருடைய பதிவை அலங்கரிக்கின்றன. இதேபோல அட்டைபெட்டி ஒன்றும் பேக் செய்யப்பட்டு காணப்படுகிறது.
துபாயில் நடத்த திட்டம்
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவிலேயே பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று முன்னதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக அது தற்போது நடத்தப்படவில்லை. மாறாக துபாய்க்கு செல்லும் வீரர்கள் அங்கேயே பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.