இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர்
சமீபத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் நடைபெற இருந்தது. முதல் போட்டி தரம்சாலாவில் மழையால் நடைபெறவில்லை. இரண்டாவது போட்டி லக்னோவில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அந்த ஒருநாள் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
முன்னெச்சரிக்கை
மீதமுள்ள இரண்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கொரோனா அச்சம் காரணமாக முகமூடி அணிந்து, மிகவும் பாதுகாப்பாக, முன்னெச்சரிக்கையாக இருந்தனர். கேப்டன் கோலி இன்னும் அதிகப்படியாக தன்னை பாதுகாத்துக் கொண்டார்.
முகமூடி
சில சமயம் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு கூட விமான நிலையங்களில் செல்லும் கோலி, இந்த முறை உடல் முழுவதும் ஆடையால் மூடிக் கொண்டு, மிக உயர்தரமான முகமூடி அணிந்து கொண்டிருந்தார்.
கண்கள் மட்டும்..
அவரது முகமூடி பாதிக்கும் மேல் முகத்தை மறைத்துக் கொண்டிருக்க, வெறும் கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது. அந்தளவுக்கு பாதுகாப்பாக இருந்தார் கேப்டன் கோலி. அவர் விமான நிலையத்தில் மற்ற வீரர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.
செல்பி
அப்போது ஒரு பெண் கையில் ஸ்மார்ட்போனுடன் வேகமாக ஓடி வந்து விராட் கோலி முன் நின்று செல்பி எடுக்க அனுமதி கேட்டார். ஆனால், கோலி இது எதையும் காணாதது போல தலையை கீழே குனிந்து கொண்டு சென்றார்.
— Anpadh educated (@PRINCE3758458) March 19, 2020 |
பரவும் வீடியோ
பின் ஒரு பாதுகாவலர் அந்த பெண்ணை தள்ளி நிற்குமாறு கூறினார். பின் விராட் கோலி வேகமாக நடந்து வெளியேறிச் சென்றார். இந்த வீடியோ ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
காரணம் என்ன?
விராட் கோலி கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தின் காரணமாக பொது மக்கள், ரசிகர்கள் தன்னை அணுகாதவாறு நடந்து கொள்வதாக தெரிகிறது. இதை சிலர் பாராட்டியும், சிலர் கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருக்காமல், செல்பி கேட்கும் அந்த பெண்ணை கண்டித்தும் உள்ளனர்.
பாதுகாப்பு அவசியம்
கோலி மிகவும் பாதுகாப்பாக இருப்பதுடன் ரசிகர்களையும் பாதுகாப்பாக இருக்குமாறு பதிவிலும், வீடியோவிலும் கூறி உள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.