மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கிறார். விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி விராட் கோலி முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
இந்த போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து மேலும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்கள். இதில் ஒருவர் பிரவீன் குமார், இன்னொருவர் தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த்.

இதில் அபினவ் முகுந்த் இந்திய அணிக்காக வெறும் ஏழு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடினார். இந்த நிலையில் விராட் கோலி ஓய்வு பெற்று இருப்பது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் முதல்முறையாக விராட் கோலியை 15 வயது உட்பட்டவர்களுக்கான தேசிய பயிற்சி முகாமில் தான் சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு நெருங்கிய நண்பர் கிடையாது.
ஆனால் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் எங்கள் இருவரிடமும் இருந்தது. அதன் பிறகு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி உயர்ந்தார். அந்த அணியில் நானும் இருந்தேன். இதேபோன்று அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து நாங்கள் இருவரும் ஒரே போட்டியில் இந்திய அணிக்காக டெஸ்டில் அறிமுகமானோம். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் எனக்கு இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி தலைமையில் வாய்ப்பு கிடைத்தது.
15 வயது இருக்கும் போது 75 குழந்தைகள் தேசிய பயிற்சி முகாமில் இணைந்திருந்தார்கள். அதிலிருந்து தற்போது உலகின் சிறந்த வீரராக கோலி உருவெடுத்திருக்கிறார். சக வீரராக ஒரு நண்பனாக தற்போது ரசிகனாக நான் கோலிக்கு மாறி இருக்கின்றேன். ஓய்வு பெற்று சில நாட்கள் கழித்து தான் நான் இந்த பதிவை வெளியிடுகின்றேன். ஏனென்றால் என் மனதை அமைதிப்படுத்தி கோலி தொடர்பாக எண்ணத்தை திரட்ட இவ்வளவு நாட்கள் ஆனது.
நமது அனைவரின் கனவையும் 15 வயதிலிருந்து விராட் கோலி சுமந்து கொண்டிருக்கின்றார். நாட்டுக்காக மட்டும் அல்லாமல் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார். விராட் கோலியின் 268 அறிமுகமான நம்பரை நான் என்றும் நேசிப்பேன் என்று அபினவ் முகுந்த கூறியுள்ளார். அபினவ் முகுந்த் 11 ரன்கள் எடுக்க விராட் கோலி அந்த இன்னிங்ஸில் நான்கு ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி 15 ரன்கள் எடுக்க அபினவ் 25 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று ஐபிஎல் தொடரில் 2013-ஆம் ஆண்டு சீசனில் அபிநவ் முகுந்த் ஆர்சிபி அணியால் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.