மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து விராட் கோலி திடீரென்று ஓய்வு பெற்றிருப்பது பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது. இந்த சூழலில் விராட் கோலி இங்கிலாந்து தொடருக்கு முன்பு ஏன் இந்த முடிவு எடுத்தார் என்று பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா என இருவரும் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய அணி அனுபவும் இல்லாமல் அந்த தொடரில் களமிறங்க போகிறது. டெல்லி ரஞ்சி அணியின் பயிற்சியாளர் சரந்திப் சிங் அளித்துள்ள பேட்டி தான் தற்போது பல சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலிய தொடருக்கு பின் விராட் கோலி ரஞ்சி போட்டி ஒன்றில் விளையாடினார். அப்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த சரந்தீப் சிங்கிடம் விராட் கோலி தாம் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு தீவிரமாக தயாராக முடிவெடுத்து இருப்பதாக கூறியிருக்கிறார். இது குறித்து பேசி உள்ள பயிற்சியாளர் சரந்தீப் சிங், நான் விராட் கோலியிடம் சில வாரங்களுக்கு முன்பு பேசினேன்.
அப்போது அவர் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் விதமாக கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதைப் போன்று இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா ஏ போட்டியிலும் தாம் பங்கு பெற கோலி முடிவு எடுத்திருந்தார். மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து தொடர் போல் மீண்டும் நான்கு அல்லது ஐந்து சதங்கள் அடிப்பேன் என்றும் கோலி என்னிடம் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
ரஞ்சிப் போட்டி விளையாட வந்த விராட் கோலி என்னிடம் இதை உறுதியாக சொல்லியிருந்தார். ஆனால் தற்பொழுது என்ன நடந்தது என தெரியவில்லை என்று சரந்தீப் சிங் கூறியிருக்கிறார். இதனால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட முடிவெடுத்திருந்த நிலையில் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் விராட் கோலியை அணியில் விட்டு நீக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பலரும் கம்பீரை விமர்சித்து வருகின்றனர்.