சிட்னி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வு பெற்றால் அது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 190 ரன்கள் தான் சேர்த்தார்.
இதனால் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், நீங்கள் பேசுவது விராட் கோலியை பற்றி என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?

விராட் கோலி நாளைய டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து விடுவார். அவர் அந்த அளவுக்கு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். விராட் கோலி நன்றாக விளையாடக் கூடியவர். அவர் எப்போது எனக்கு போதும் என்று முடிவு எடுக்கிறாரோ அதுவரை அவர் விளையாட வேண்டும்.
திடீரென்று விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அது ஒரே ஒரு அணிக்கு தான் இழப்பு. அது இந்தியா தான்! விராட் கோலி இருக்கும் அணியில் நான் கேப்டனாக இருந்தால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் அடிக்க வில்லை என்றாலும் நான் அவர் எனது அணியில் இருக்க வேண்டும் என தேர்வு குழுவினரிடம் சண்டை போடுவேன்.
பலரும் சச்சினின் சிட்னியில் இரட்டை சதம் அடித்தது குறித்து பேசுகிறார்கள். ஆனால் விராட் கோலியை விட சச்சின் முற்றிலும் வித்தியாசமான வீரர். அந்த தொடரில் இரண்டு முறை கவர் ட்ரைவ் அடித்து ஆட்டம் இழந்ததால் சச்சின், சரி சிட்னியில் நான் இரட்டை சதம் அடிப்பேன் என்று கூறிவிட்டு அடித்தார். எனவே சச்சினை யாருடனும் ஒப்பிட முடியாது.
விராட் கோலியின் பலமே பந்து பேட்டில் படுவதுதான். கோலியும் வித்தியாசமாக விளையாடக்கூடிய வீரராக இருக்கிறார். விராட் கோலி பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர் களத்தில் இருந்தாலே அது இந்திய அணிக்கு மதிப்பை தான் கொடுக்கும். எதிரணியின் விக்கெட்டுகளை எடுக்க விராட் கோலி நல்ல பிளான்களை வழங்குவார் என்று மைக்கேல் கிளார்க் பாராட்டி இருக்கிறார்.