மும்பை: இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரரான விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டை உயிராக நேசித்த கோலி, தனது புகழின் உச்சியில் இருக்கும்போதே ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.
இந்நிலையில், முன்னாள் இந்திய வீரரும், மேற்கு வங்க கிரிக்கெட் வீரருமான மனோஜ் திவாரி, கோலியின் ஓய்வுக்குப் பின்னால் ஏதோ சில "சரியில்லாத விஷயங்கள்" நடந்துள்ளதாகக் கூறி ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2024-25 தொடரின் முதல் டெஸ்டில் சதம் அடித்த பிறகு, கோலியின் ஆட்டம் சற்று மந்தமானது. நீண்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டுக்குத் திரும்பிய அவர், ரயில்வே அணிக்கு எதிராக ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார்.
அருண் ஜெட்லி மைதானத்தில் அவரைக் காண பெரும் கூட்டம் திரண்டாலும், பேட்டிங்கில் சோபிக்க முடியாமல் 15 பந்துகளில் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடர்களில் கவனம் செலுத்திய கோலி, ஐபிஎல் தொடரின் நடுவே திடீரென தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்தார்.
இந்த திடீர் அறிவிப்பு குறித்து பேசிய மனோஜ் திவாரி, "விராட் கோலியால் இன்னும் குறைந்தது மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும். அவரது உடற்தகுதி அப்படி. இங்கிலாந்து தொடருக்காக அவர் தன்னைத் தயார்படுத்தி வந்த நிலையில், இந்த ஓய்வு முடிவு எனக்கும் மற்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது," என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
"என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. திரைக்குப் பின்னால் உள்ள கதை என்ன? இந்திய அணியில் தன்னை அவர்கள் விரும்பவில்லை என்று அவர் உணர்ந்திருக்கலாம். அதை அவர்தான் சொல்ல வேண்டும். ஆனால், அவர் ஒருபோதும் அதை பொதுவெளியில் சொல்ல மாட்டார். ஏனென்றால், ஒரு மனிதனாக அவர் மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளார்."
"கடவுள் தனக்குக் கொடுத்த வாழ்க்கையில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் ஆன்மீக வழியிலும் பயணிக்கத் தொடங்கிவிட்டார். ஒருவர் ஆன்மீகவாதியாக மாறும்போது, இதுபோன்ற விஷயங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவார்கள். கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்ப மாட்டார்கள்" என்று மனோஜ் திவாரி கூறினார்.
"ஆனால் ஒரு கிரிக்கெட் காதலனாக, இந்திய அணியைச் சுற்றி நடக்கும் விஷயங்கள், எங்களைப் போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கு ஓரளவுக்குத் தெரியும். திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அவர் விளையாடிய சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்" என்று மனோஜ் திவாரி மறைமுகமாக கம்பீரை குறிப்பிட்டார்.
மனோஜ் திவாரியின் இந்தக் கருத்துகள், விராட் கோலியின் ஓய்வு குறித்த மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது. பிசிசிஐ அல்லது அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகளால் கோலி இந்த முடிவை எடுத்தாரா என்ற கேள்வியை இது மீண்டும் எழுப்பியுள்ளது.