பெங்களூர்: ஐபிஎல் தொடரில் இருந்து விராட் கோலி விரைவில் ஓய்வு பெறும் சூழல் நிலவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்சிபி அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ள முன்னணி பிராண்ட் நிறுவனம் விராட் கோலியை தங்களின் விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்ய முன் வந்துள்ளது. ஆனால் விராட் கோலி அதனை மறுத்து, ஆர்சிபி அணியில் இருக்கும் வேறு வீரரை ஒப்பந்தம் செய்ய அறிவுறுத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 17 ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த சீசனில் டூ பிளசிஸ் ரீடெய்ன் செய்யப்படாத போது, பலரும் விராட் கோலி தான் கேப்டன்சியை ஏற்பார் என்று கூறினர். ஆனால் விராட் கோலி கொஞ்சம் கூட கேப்டன்சி மீது ஆர்வம் காட்டவில்லை. மாறாக புதிய கேப்டனாக ரஜத் பட்டிதரை கொண்டு வர ஆலோசனை வழங்கினார்.

அதற்கேற்ப ஆர்சிபி அணி நிர்வாகமும் ரஜத் பட்டிதரை கேப்டனாக்கியது. அவர் கேப்டனாக களமிறங்கிய முதல் சீசனிலேயே ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இதனால் விராட் கோலி மைதானத்திலேயே ஆனந்த கண்ணீருடன் காணப்பட்டார். கோப்பையை வென்ற போது டி வில்லியர்ஸ் உள்ளிட்டோருடன் விராட் கோலி கொண்டாடியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விரைவில் வெளியேறும் முடிவை விராட் கோலி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினாலும், 2027 உலகக்கோப்பை தொடர் வரை விராட் கோலி ஆடுவாரா என்பது சந்தேகம்தான்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறும் முடிவை விராட் கோலி எடுத்துவிட்டதாக தெரிகிறது. அடுத்த மெகா ஏலத்தின் போது விராட் கோலியின் வயது 38ஐ கடந்திருக்கும். இதனிடையே ஆர்சிபி அணியுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள முன்னணி பிராண்ட் ஒன்று, விராட் கோலி விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டி இருக்கிறது.
ஆனால் விராட் கோலி, ஆர்சிபி அணியின் வேறு வீரர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை கொடுக்க அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் இன்னும் 2 சீசன்கள் மட்டுமே விராட் கோலி விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே லண்டனில் செட்டிலாகிவிட்ட விராட் கோலி, தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார். இதனால் முழுமையான தந்தையாக விராட் கோலி செயல்பட முடிவு எடுத்திருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.