மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்து, முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் சில அதிரடி கருத்துகளைத் தெரிவித்துள்ளார். விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவே விரும்பியிருப்பார். ஆனால், பிசிசிஐ-யில் நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் அவர் ஓய்வு பெற வைக்கப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சியான கருத்தை அவர் கூறியுள்ளார்.
2020ஆம் ஆண்டு முதல் விராட் கோலியின் டெஸ்ட் பேட்டிங் ஃபார்ம் சற்று சரிவைச் சந்தித்தது. அதற்கு முன்பு வரை 55-க்கும் அதிகமாக இருந்த அவரது பேட்டிங் சராசரி, 46 என்ற அளவில் சரிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அவரது பேட்டிங் சராசரியைப் பார்த்தால், 30-க்கும் கீழேதான் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, விராட் கோலியை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கும் முடிவை பிசிசிஐ எடுத்திருக்கலாம் என முகமது கைஃப் கூறியுள்ளார்.

இது பற்றி முகமது கைஃப் கூறியிருப்பதாவது: "விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்பி இருக்கலாம். நிச்சயமாக பிசிசிஐ-யில் இது குறித்து ஏதேனும் பேச்சுவார்த்தை நடந்திருக்கும். தேர்வுக் குழுவினர் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சரியாக விளையாடாததைச் சுட்டிக்காட்டி இருப்பார்கள். அணியில் அவருக்கான இடம் இனியும் இல்லை என்பதை கூறி இருப்பார்கள். அங்கே என்ன நடந்தது என நமக்கு எப்போதும் தெரியப் போவதில்லை. திரைக்குப் பின்னே என்ன நடந்தது என நாம் ஊகிப்பது மிகவும் கடினம்.
கடைசி நிமிட முடிவின்படி விராட் கோலி ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினார். அவர் நிச்சயமாக அடுத்து நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், கடந்த சில வாரங்களாக நடந்த விஷயங்கள் மூலம் பிசிசிஐ-யின் ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை, தேர்வுக் குழுவினரும் அவரை ஆதரிக்கவில்லை என்பது நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் அவர் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்" என்றார் முகமது கைஃப்.
விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட நினைத்த நிலையில் பிசிசிஐ அவரை அணியை விட்டு வெளியேற அழுத்தம் கொடுத்து இருக்கிறது என்பதை மறைமுகமாக கூறி இருக்கிறார் முகமது கைஃப்.