பெங்களூரு: இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி, சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே ட்ராபியில் களமிறங்கவுள்ளார். ஆனால், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்த விராட் கோலி, பிசிசிஐ-யின் புதிய உத்தரவுப்படி உள்ளூர் போட்டிகளில் விளையாட சம்மதித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு டெல்லி அணிக்காக ஆடியவர், தற்போது 5,788 நாட்களுக்குப் பிறகு மீண்டும் டெல்லி ஜெர்சியில் நாளை (புதன்கிழமை) களமிறங்குகிறார்.
விஜய் ஹசாரே தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணி, நிதிஷ் குமார் ரெட்டி தலைமையிலான ஆந்திரப் பிரதேச அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி விராட் கோலியின் 'இரண்டாவது வீடு' என அழைக்கப்படும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

கோலி ஆடுகிறார் என்றாலே மைதானம் நிரம்பி வழியும். அதிலும் பெங்களூரு என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தப் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டி "மூடிய கதவுகளுக்குள்" நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது நடந்த கொண்டாட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. அதன் பிறகு சின்னசாமி மைதானத்தில் பெரிய அளவில் போட்டிகள் நடத்தப்படவில்லை.
தற்போது கோலி விளையாடுவதால் கூட்டம் அலைமோதும் என்பதால், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கர்நாடக மாநில அரசு ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கத் தயக்கம் காட்டியதாகத் தெரிகிறது. கர்நாடக கிரிக்கெட் சங்கம் (KSCA) ஓரிரு பகுதிகளையாவது திறக்கலாம் என நினைத்தாலும், போலீஸ் மற்றும் அரசின் அனுமதி கிடைக்காததால் ரசிகர்களுக்கு 'நோ என்ட்ரி' போர்டு போடப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் சரண்தீப் சிங் கூறுகையில், "விராட் கோலி மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். நாளை நடக்கும் போட்டியில் அவர் நிச்சயம் விளையாடுவார். இளம் வீரர்களுக்கு இது மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும்" என்றார். பெங்களூரு ரசிகர்கள் தங்கள் அபிமான 'கிங் கோலியை' நேரில் பார்க்கும் வாய்ப்பை இழந்து ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.