டெல்லி: விராட் கோலி தனது ஆரம்ப கிரிக்கெட் நாட்களில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை சக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குடன் பகிர்ந்து கொண்டார். டெல்லி அண்டர்-14 அணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பிளேயிங் லெவனில் கோலியின் இடத்தை உறுதி செய்வதற்காக லஞ்சம் கேட்கப்பட்டது என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
அப்போது கோலியின் தந்தை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, லஞ்சம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோலி கடைசி நேரத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த அனுபவம் நேர்மை மற்றும் விடாமுயற்சியின் மதிப்புகளை அவருக்குள் விதைத்ததாக கூறினார் கோலி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கோலி சமீபத்தில் டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பையில் மீண்டும் விளையாட வந்துள்ளார். அவரது வருகை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் சமூகத்தினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தப் பேட்டி வெளியாகி உள்ளது.
கோலி அந்த அனுபவத்தைப் பற்றி கூறுகையில், "நான் அண்டர்-14 டெல்லி அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பின்னர் சில சிக்கல்கள் காரணமாக நள்ளிரவு 1:00 மணிக்கு என்னை அணியிலிருந்து நீக்கினார்கள். மாநில அளவில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். சில 'சம்பிரதாயங்கள்' (லஞ்சம்)காரணமாக என்னை நீக்கி விட்டு வேறு ஒருவர் தேர்வு செய்யப்பட்டார்."
"அப்போது எனது தந்தைக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. என் தந்தை பணம் கொடுத்தால், இரண்டு போட்டிகளுக்குப் பிறகு என்னை அணியில் சேர்க்கலாம் என்றும் கூறப்பட்டது. அப்போது எனது தந்தை உறுதியாக, "அவனை விளையாட வைக்க நான் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன். அவன் தனது திறமையால் விளையாட முடிந்தால், விளையாடட்டும். இல்லையென்றால், அது அவனுக்கு விதிக்கப்படவில்லை" என்று பதிலளித்தார்.
இந்த சம்பவம் கோலியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தனது தந்தையின் அந்த செயல் தனது குணம் மற்றும் தொழில் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.