மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மாவின் ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ மாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ள 'ஏ+’ பிரிவை ரத்து செய்வதன் மூலம், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் 'பி’ பிரிவுக்குத் தரம் குறைக்கப்படலாம்.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அறிவுறத்தலின் படி, இனி 'ஏ’, 'பி’, 'சி’ டி என ஒப்பந்த வகைகளே இருக்கும். அனைத்து வடிவ வீரர்களுக்கான 'ஏ+’ பிரிவு ரத்து செய்யப்படும். அகர்கரின் இந்த அறிவுறுத்தல் பிசிசிஐ ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது.

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற கோலி மற்றும் ரோகித், 10 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக 'பி’ பிரிவுக்குத் தள்ளப்படலாம். 2025 ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட 2024-25 மத்திய ஒப்பந்தங்களின்படி, 'ஏ+’ பிரிவில் கோலி, ரோகித், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றனர். 'ஏ’ பிரிவில் முகமது சிராஜ், கே.எல். ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பந்த் ஆகியோர் உள்ளனர்.
'பி’ கிரேடில் சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 'சி’ பிரிவில் 19 வீரர்கள் உள்ளனர்; பெரும்பாலானோர் ஒரு ஃபார்மட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள்.
சம்பள விவரம் வருமாறு: 'ஏ+’ பிரிவு வீரர்களுக்கு ஆண்டுக்கு ₹7 கோடி, 'ஏ’ பிரிவுக்கு ₹5 கோடி, 'பி’ பிரிவுக்கு ₹3 கோடி, 'சி’ பிரிவுக்கு ₹1 கோடி வழங்கப்படுகிறது. பி.சி.சி.ஐ. ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் செயல்திறன் மற்றும் பணிச்சுமையை பொறுத்து பிரிவுகளை மாற்றுகிறது.
புதிய பிரிவுகள் படி சம்பளத் தொகை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஜடேஜா, பும்ரா போன்ற வீரர்களின் ஒப்பந்தம் மாற்றப்பட்டாலும், ஊதிய உயர்வால் எந்த பாதிப்பும் இருக்காது. புதிய ஊதியத்தில் ஏ பிரிவில் 10 கோடி ரூபாயும், பி பிரிவில் 7 கோடி ரூபாயும், சி பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாயும், டி பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ.3 கோடி வழங்கப்படலாம் என தெரிகிறது.