
மும்பை: மும்பையில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இரு அணிகளின் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி புதிய சாதனையைப் புரிந்தனர்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த சீசனின் 14வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின்.
முதலில் ஆடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 52 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார்.

214 ரன்கள் இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 46 ரன்களில் தோல்வியடைந்தது. அந்த அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி புதிய சாதனையை படைத்துள்ளனர். ஐபிஎல் டி-20 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் 90 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
இதுவரை 10 சீசன்கள் முடிந்து, தற்போது 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 600க்கும் மேற்பட்ட ஆட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், முதல் முறையாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதனால், இந்த சாதனையை அவ்வளவு சுலபமாக முறியடிக்க முடியாது என்றே கூறலாம்.