
3வது போட்டி
இந்திய அணி சார்பில் ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 97 பந்துகளில் 116 ரன்களை விளாசினார். மற்றொருபுறம் விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இவர்களின் அதிரடியை தாண்டி, இலங்கை வீரர்களின் ஒரு செயல்பாடும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஜெப்ரி வான்டர்சே மற்றும் பண்டாரா ஆகியோர் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்டனர்.

எதிர்பாராத விபத்து
இந்திய இன்னிங்ஸில் 43வது ஓவரின் போது விராட் கோலி அடித்த பந்து ஒன்று ஃபைன் லெக் பவுண்டரிக்கு வேகமாக சென்றது. அப்போது அந்த பந்தை தடுக்க ஓடி வந்த வாண்டர்சே மற்றும் பண்டாரா இருவரும் எதிர் எதிர் திசைகளில் இருந்து ஓடி வந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் பயங்கரமாக மோதிக்கொண்டு காயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சில நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டது. என்ன ஆனதோ என புரியாமல் இலங்கை வீரர்கள் பதற்றத்தில் இருந்தனர்.

கோலியின் அக்கறை
அந்த சூழலில் விராட் கோலி நேரடியாக இலங்கை கேப்டன் தசுன் சனகாவிடம் சென்று அந்த இரு வீரர்களுக்கும் என்ன ஆனது? தற்போது உடல்நிலை சரியா ? என நலம் விசாரித்தார். மேலும் ஃபீல்டிங்கின் போது எதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அதுகுறித்த வீடியோவை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

கோலியின் சாதனைகள்
இது ஒருபுறம் இருக்க, இதே போட்டியில் விராட் கோலி பல சாதனைகளை முறியடித்தார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46வது சதத்தை 452 வது இன்னிங்சில் தான் அடித்தார். விராட் கோலியோ 259வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். மேலும், சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி, அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். இதற்கு முன் சச்சின் 20 சதம் அடித்திருந்தார். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தை பிடித்தார்.


Click it and Unblock the Notifications











