ஒருநாள் போட்டி நாளை துவக்கம்
நியூசிலாந்தில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடந்து முடிந்துள்ள சர்வதேச டி20 தொடரில் 5க்கு 0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இதையடுத்து நாளை முதல் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் துவங்கவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் நாளை துவங்க உள்ளது. இதை முன்னிட்டு கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.
கேப்டன் விராட் கோலி உருக்கம்
ஹாமில்டனின் செடன் பூங்காவில் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, தன்னுடைய மனதிற்கு மிகவும் பிடித்தமானவராக கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரையண்ட் இருந்ததாகவும், அவரது போட்டிகளை தன்னுடைய இளம் வயதில் தான் காலையில் சீக்கிரமே கண் விழித்து பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். அவருடைய மரணம் தன்னை நிலைகுலைய செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிர்ச்சியை வெளிப்படுத்திய விராட்
கோப் பிரையண்ட்டின் மரணம் தன்னுடைய மனதை சுக்குநூறாக்கியதாகவும், மிகுந்த அதிர்ச்சியை அளித்ததாகவும் விராட் கோலி கூறினார். தன்னுடைய மனதிற்கு பிடித்த கோப் பிரையணட்டின் மரணம், வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் அதன் நிலையற்ற தன்மையை தனக்கு உணர்த்தியுள்ளதாவும் விராட் கோலி மேலும் குறிப்பிட்டார்.
"அதை கொண்டாடுகிறேன்"
நாம் எந்த வேலையை செய்கிறோம் என்பது முக்கியமானதல்ல என்று தெரிவித்த விராட் கோலி, ஆனால் முக்கியமானது வாழ்க்கை மட்டுமே என்றும் அதன் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றும் தான் அதை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். சில நேரங்களில் ஒரு பந்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அதிகமாக சிந்திக்கிறோம். ஆனால் வாழ்க்கையை வாழ மறந்துவிடுகிறோம் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி
41 வயதான கூடைப்பந்தாட்ட சாம்பியன் கோப் பிரையண்ட், மற்றும் அவரது மகள் ஜியானா இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்சின் அருகில் கலபசாஸ் மலைப்பகுதிகளில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோப் பிரையண்ட்டின் மரணம் சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.