மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் இளம் வீரர் கோன்ஸ்டாஸ் உடன் விராட் கோலி மோதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 19 வயதான கோன்ஸ்டாஸ் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியின் 52 பந்துகளில் அரைசதம் விளாசி இருந்தார். இந்த நிலையில் ஓவரின் நடுவில் விராட் கோலி வேண்டும் என்றே கோன்ஸ்டாசை மோதியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இந்த மோதலை விராட் கோலி தவித்திருக்கலாம் என அறிவுரை வழங்கியிருக்கிறார். இது குறித்து பேசி உள்ள அவர் விராட் கோலி இதை செய்திருக்கக் கூடாது. கூட்டம் நெரிசல் உள்ள ஒரு தெருவில் நீங்கள் நடந்து செல்லும்போது எதிரே ஒருவர் வந்தால் நீங்கள் அவருக்கு வழிவிடலாம்.

இதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் நகர்ந்து சென்றால் நீங்கள் ஒன்றும் யாருக்கும் குறைந்தவர் என்று அர்த்தம் கிடையாது. இது போன்ற சம்பவங்கள் கிரிக்கெட் களத்தில் பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள். நிச்சயம் கோலி இதை செய்திருக்கக் கூடாது. இந்த சம்பவத்தை முதலில் பார்த்தவுடனே நிச்சயம் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிந்தது.
நான் ரீப்ளே பார்க்கவில்லை. ஆனால் இருவருமே கீழே பார்த்துக்கொண்டுதான் நடந்து வந்தார்கள்.கோன்ஸ்டாஸ் தன்னுடைய பேட்டையும் விராட் கோலி பந்தையும் பார்த்துக் கொண்டு வந்தார். ஆனால் போட்டி நடுவர் வீடியோ ஆதாரத்தை பார்த்து இன்று மாலை கடும் அபராதம் விதிப்பார் என்பது மட்டும் தெரிகிறது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
விராட் கோலி மீது தடை விதிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் கவாஸ்கர் மட்டும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர், கோலி மிகப்பெரிய வீரர் அனுபவம் வாய்ந்த நபர். அவர் இப்படி செய்திருக்கக் கூடாது கிரிக்கெட் என்பது எப்படி மோதிக் கொள்ளும் விளையாட்டு கிடையாது. எனவே இதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்று ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.