
சௌதாம்ப்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட்டில் பணம் சம்பாதிக்க வேண்டி டி20 போல புதிதாக வர உள்ள 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி கிரிக்கெட்டை பாதிக்கும் என தன் கருத்தை கூறி இருக்கிறார்.
இங்கிலாந்து 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்த ஒப்புதல் கேட்டு உள்ளது. இருபது ஓவர் போட்டிகளில் ஓவருக்கு ஆறு பந்துகள் என 120 பந்துகள் வீசப்படுகிறது. அதை குறைப்பதோடு மட்டுமில்லாமல், கிரிக்கெட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பல அடிப்படைகளை மாற்றி ஒரு புதிய கிரிக்கெட் போட்டியை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முயன்று வருகிறது.

100 பந்துகள் என்றால், கடைசி ஓவரை முழுமையான ஓவராக வீச முடியாது. அதாவது 16.4 ஓவர்களோடு போட்டி முடியும். இந்த நிலையில் சிலர் ஓவருக்கு ஐந்து பந்துகள் வீசலாம் எனவும், அல்லது ஒரு பந்துவீச்சாளர் பத்து பந்துகள் வரை தொடர்ந்து வீசலாம் எனவும் யோசனை தெரிவித்து வருகின்றனர்.
இது கிரிக்கெட்டை சுவாரஸ்யமாகி பணம் சம்பாதிக்க முயலும் இந்த முயற்சி தன்னை பாதிப்பதாக தெரிவித்துள்ளார், கோலி. "நான் சில சமயம் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவது, நம்மிடம் அதிகம் கேட்பது போல இருக்கிறது. வியாபார நோக்கங்கள் கிரிக்கெட்டின் உண்மையான தரத்தை எடுத்துக் கொள்வதாக தோன்றுகிறது. அது என்னை காயப்படுத்துகிறது" என்றார்.
மேலும் கூறுகையில், "நிச்சயமாக ஒரு புதிய கிரிக்கெட் விளையாட்டை சோதனை செய்து பார்க்க நான் விரும்பவில்லை. லீக் போட்டிகளை நான் ஒப்புக் கொள்வேன், ஆனால், சோதனை முயற்சிகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை" என தெரிவித்தார் கோலி.
விராட் கோலி இப்படி கூறினாலும், முதன் முதலில் கிரிக்கெட்டில் அதுவரை இல்லாத அளவு வியாபார நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது ஐபிஎல் போட்டிகளில் தான். அது இன்று வளர்ந்து எல்லா நாட்டிலும் இப்போது டி20 தொடர்கள் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.