மெல்போர்ன்: இந்தியாவின் பேட்டிங்கிற்கும், தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுக்குமான போட்டியாகவே நாளைய ஆட்டம் அமையும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோஹ்லி கூறினார்.
உலக கோப்பை கிரிக்கெட்டின் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மெல்போர்ன் நகரில் நாளை மோத உள்ளன. இதையொட்டி இன்று கேப்டன் டோணிக்கு பதிலாக துணை கேப்டன் விராட் கோஹ்லி செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றி இந்திய வீரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் வென்றால் இந்திய அணியின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்.
எந்த ஒரு அணியுடனான போட்டியுமே இந்தியாவுக்கு முக்கியமானதுதான். இருந்தாலும் தென் ஆப்பிரிக்கா பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அணி. நாளைய ஆட்டம், இந்தியாவின் பேட்டிங்கிற்கும், தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுக்குமான போட்டியாகத்தான் இருக்கப்போகிறது.
ஏபிடி வில்லியர்ஸ் போன்ற பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முன்கூட்டியே வியூகம் வகுப்பது பயன்தராது. இந்திய அணி வீரர்கள் ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்துவதில்தான் கவனம் வைத்துள்ளோம். அன்றைய தினத்தில் யார் சிறப்பாக பேட்டிங், பவுலிங் செய்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி.
கடந்த போட்டியில் நிர்பந்தம் இருந்ததால் மெதுவாக ஆட்டத்தை கொண்டு சென்றேன். எனவேதான் 107 ரன்கள் அடிக்க 126 பந்துகள் தேவைப்பட்டது. ஆனால் நாளைக்கு முதல் பத்து பந்தில் ஆறு பவுண்டரிகள் கூட விளாசக்கூடும். அதை நான் முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை, இவ்வாறு விராட் கோஹ்லி கூறினார்.