4வது டெஸ்ட் போட்டி: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறல்!
மும்பை: 4வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இன்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்துள்ளது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியை அஸ்வின் சுழல் பந்து வீச்சு கட்டுப்படுத்தியது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி 3வது நாள் முடிவில் 52 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. இந்திய அணியில் முரளி விஜய் சதம் அடித்தார். மறு பக்கம் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தன.
இதையடுத்து ஜோடி சேர்ந்த முரளி விஜய் - கோஹ்லி கூட்டணி உணவு இடைவேளைக்குப் பிறகு பிரிந்தது. ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் கோஹ்லிக்கு தோல்கொடுத்தனர். இதனால் இங்கிலாந்தின் பந்துவீச்சை பதம்பார்த்த கோஹ்லி தனது 15 சதத்தைக் கடந்தார்.
நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 451 ரன்களை குவித்திருந்தது. இந்நிலையில் இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி காலை முதலே நிதானமாக ஆடி வந்தது.
இன்றைய ஆட்டத்தின் முக்கிய அம்சமாக கோஹ்லி இரட்டை சதம் விளாசினார். ஒரே ஆண்டில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும்.
இதைத்தொடர்ந்து 9வது நிலை வீரராக நேற்று களமிறங்கிய ஜெயந்த் யாதவ் இன்று டெஸ்ட்தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மேலும் 9வது நிலை வீரராக களமிறங்கி சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 631 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை விட 231 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அதிகளவாக 235 ரன்களும் முரளி விஜய் 136 ரன்களும் ஜெயந்த் யாதவ் 104 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. இன்றைய ஆட்டநேர முடிவில் 182 ரன்களை எடுத்த அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.


Click it and Unblock the Notifications