பெங்களர்: பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட துயர சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார். ஆர்சிபி அணியின் வரலாற்று சிறப்புமிக்க ஐபிஎல் வெற்றியை சின்னசாமி மைதானத்தில் கொண்டாடிய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்தனர்.
50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால் இந்த கொண்டாட்டம் துயரமாக மாறியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோலி, ஜூன் 4, 2025, ஆர்சிபி குடும்பத்திற்கு என்றும் மறக்க முடியாத துயரமான நாளாக இருக்கும் என்றார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த கோலி, காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தார்.

"ஜூன் 4-ம் தேதியைப் போன்ற ஒரு துயரத்திற்கு வாழ்க்கையில் எதுவும் உங்களைத் தயார்படுத்தாது. எங்கள் அணியின் வரலாற்றில் மிக மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டியது.துயரமாக மாறியது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும், காயமடைந்த எங்கள் ரசிகர்களுக்காகவும் நான் பிரார்த்தித்து வருகிறேன்.
உங்கள் இழப்பு இப்போது எங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாகிவிட்டது. ஒன்றாக, நாம் முன்னேறுவோம், பயனுள்ள, மரியாதைக்குரிய மற்றும் பொறுப்பான முறையில்," என்று கோலி ஆர்சிபி-யின் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், பொது பாதுகாப்பை உறுதி செய்ய, எதிர்காலத்தில் பெரிய அளவிலான கொண்டாட்டங்களை மாற்று இடங்களுக்கு மாற்றுவதற்கு பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.ஜூன் மாதத்தில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து, ஆர்சிபி கேர்ஸ் என்ற ஆறு அம்ச அறிக்கையை அறிவித்துள்ளது.
இந்த அறிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் நீண்டகால நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது.இந்த முயற்சி, ஆர்சிபி-யின் முந்தைய முடிவான இழப்பை சந்தித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹25 லட்சம் நிதி உதவி வழங்குவதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.