பிரிஸ்பன்: ஆஸ்திரேலியா உடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதால் ரசிகர்கள் கடுப்பாக உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்குள் ஒரு குடுமி பிடி சண்டை நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த சண்டையை ஆரம்பித்து வைத்தவர் துணை கேப்டனான விராத் கோஹ்லி. அவர் போய் சண்டை போட்டது தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவனுடன். காரணம் - 2வது இன்னிங்ஸில் 4வது நாள் ஆட்டத்தின்போது காயம் காரணமாக கடைசி நேரத்தில் தவன் ஆட முன்வராததால்.

தவன் காயத்தை கடைசி நேரம் வரை சொல்லாமல் இருந்து கடைசியில் சொன்னதால் ஏற்பட்ட குழப்பத்தால் கோஹ்லியை திடீரென களம் இறக்க நேரிட்டு விட்டதாக கேப்டன் டோணி கூறியிருந்தார். ஆனால் அவர் சொல்ல மறந்த கதை ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது.
அதுதான் டிரஸ்ஸிங் ரூமில் கோஹ்லிக்கும், தவனுக்கும் இடையே நடந்த வாய்ச்சண்டை.
அதாவது 4வது நாள் ஆட்டத் தொடக்கத்தில் தவனால் காயம் காரணமாக விளையாட வர முடியாமல் போய் விட்டது. இதனால் அவசரம் அவசரமாக கோஹ்லியை ஆடச் சொல்லியுள்ளார் டோணி. கோஹ்லியும் களம் இறங்கி ஒரே ஒரு ரன்னை மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பி விட்டார்.
ஆட்டமிழந்த கடுப்பில் நேராக தவனிடம் போன அவர் உன்னால்தான் நான் அவசரம் அவசரமாக ஆடப் போய் இப்போது அவுட்டாகி விட்டேன் என்று கோபமாகக் கூறினாராம். இதனால் கோபமடைந்த தவன், காயம் ஏற்பட்டால் என்னால் எப்படி ஆட முடியும். நான் பொய் சொல்லவில்லை. நாட்டுக்காக உண்மையாக ஆடுபவன் நான் என்று மீசையை முறுக்கியபடி கூறியுள்ளார் போல.
இதையடுத்து இருவருக்கும் இடையே வாய் வார்த்தை தடித்து வாக்குவாதம் மூண்டுள்ளது. இதைக் கேள்விப்பட்ட அணி இயக்குநர் ரவி சாஸ்திரி விரைந்து வந்து இருவரையும் அமைதிப்படுத்தி விலக்கி விட்டாராம்.
ஆனால் தவன் காயமடைந்ததற்கு இந்திய அணியினர் பிராக்டிஸ் செய்த பிட்ச்தான் காரணம் என்று கேப்டன் கோஹ்லியே கூறியுள்ளார். அதுவும் கூட முதல் நாள் இறுதியில் ஆட்டமிழக்காமல் நல்ல நிலையில்தான் இருந்தார் தவன். அடுத்த நாள் காலையில் பிராக்டிஸ் செய்தபோதுதான் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை அவர் உடனடியாக சொல்லியிருக்கலாம். ஆனால் சொல்லாமல் விட்டு விட்டார். அதுதான் அவர் செய்த தப்பு. ஆனால் பின்னர் மருந்து போட்டுக் கொண்டு விளையாட வந்த தவன்தான், அரை சதம் போட்டு இந்திய அணி ஓரளவாவது ரன் குவிக்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியோ தவன் தலையில் பொங்கல் வைக்க யாரோ முடிவு செய்து விட்டார்கள் போல...!