சிட்னி: ஆஸ்திரேலியாவில் செய்த செயலுக்காக விராட் கோலியை தடை செய்து இருக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஹார்மிசன் குறிப்பிட்டு இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது.
அந்தத் தொடரில் விராட் கோலி மிக மோசமாக பேட்டிங் செய்தார். நான்காவது மற்றும் ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் வந்த அவுட் சைடு ஆஃப் பந்தில் வரிசையாக கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவரது பேட்டிங் மோசமாக இருந்தது. அது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஆடுகளத்தில் அவரது செயல்பாடுகளும் விமர்சனத்தை சந்தித்தது.

அவர் ஆஸ்திரேலிய அணியின் 19 வயது வீரர் சாம் கோன்ஸ்டாஸ் உடன் மோதலில் ஈடுபட்டார். தனது தோள்பட்டையால் வேண்டும் என்றே அந்த இளம் வீரரை இடித்து இருந்தார். அது தேவையற்ற செயல் என்பதோடு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி அது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
அதற்காக விராட் கோலிக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு 20 சதவீதம் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. அது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். கோலிக்கு குறைவான தண்டனையே வழங்கப்பட்டுள்ளது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதே கருத்தை முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஹார்மிசன் முன் வைத்து இருக்கிறார். அவர் இது பற்றி பேசுகையில், "விராட் கோலி ஆஸ்திரேலியாவில் முற்றிலுமாக சரியாக விளையாடவில்லை. அதை தவிர்த்து ஆடுகளத்திலும் அவர் தவறாக நடந்து கொண்டார். நான் விராட் கோலியை எந்த அளவுக்கு விரும்புகிறேன் என உங்களுக்கு தெரியும். அவர் இந்த விளையாட்டுக்காக நிறைய விஷயங்களை செய்து இருக்கிறார். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உள்ளது. அந்த எல்லையை நாம் மீறக் கூடாது. அவர் செய்த செயலுக்கு தடை விதித்து இருக்க வேண்டும்." என்று கூறி இருக்கிறார்.
மெல்போர்னில் நடந்த நான்காவது போட்டியில் தான் விராட் கோலி, சாம் கோன்ஸ்டாஸ் மோதல் சம்பவம் நடந்தது. அப்போது விராட் கோலிக்கு போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது.