மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்ந்து ஒரே மாதிரி ஆட்டம் இழந்தது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி இந்த தொடரில் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்த நான்கு டெஸ்ட் போட்டியிலும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்த தொடரில் விராட் கோலி 190 ரன்கள் தான் அடித்தார். விராட் கோலிக்கு ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்து மிகவும் ஆபத்தாக அமைந்துவிட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொண்டு திரும்ப வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், விராட் கோலி இடம் நான் பார்க்கும் சவால் என்றால், அவர் அதிக அளவு ரன் குவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இதற்காக தன்னையே அவர் வருத்திக்கொண்டு கடுமையாக உழைக்கிறார். இதன் மூலம் பேட்டிங் அவருக்கு கடினமாக மாறிவிட்டது. சில சமயம் ஒரு சிம்பிளான விஷயத்தை நாமே கடினமாக மாற்றிக் கொண்டால், நமக்குத் தேவையான வெற்றி கிடைக்காது. ஒரு காலத்தில் நானும் இப்படி விளையாடினேன். அப்போது அவுட்டாக கூடாது என்று நினைத்து தான் விளையாடினேன் தவிர ரன் குவிக்க வேண்டும் என்பதையே நான் மறந்து விட்டேன்.
நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. மற்ற வீரர்களுக்கு நான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். என் அணிக்கு நான் தேவை என்பதால் நான் கடுமையாக உழைத்தேன். அப்போதெல்லாம் என்னால் சரியாக விளையாட முடியவில்லை.
நான் சிறந்த கிரிக்கெட் விளையாடும் போது இப்படி எல்லாம் நான் யோசித்ததே கிடையாது.
நான் களத்திற்கு வந்து பந்தை எதிர்கொண்டு ரன்கள் குவிப்பேன். தற்போது நான் என்ன மாதிரி ஒரு நிலையில் இருந்தனோ அதே நிலையில் தான் கோலி இருக்கிறார். கோலி ஆட்டமிழக்கும் முறையிலே நாம் பார்த்தால் தெரியும். அவருக்கு மனதளவில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது. ஆப் ஸ்டம்ப்க்கு வெளியே செல்லும் பந்தை அவர் அடிக்க கூடாது என்று தான் நினைக்கிறார். ஆனால் அதையும் மீறி அடித்து விடுகிறார். இந்த சூழலில் விராட் கோலி சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு களத்திற்கு திரும்பி வரவேண்டும் என்று விராட் கோலிக்கு பாண்டிங் அறிவுரை வழங்கினார்.