பெங்களூர்: விஜய் ஹசாரே டிராபி தொடரில் விராட் கோலியை சதம் அடிக்க விடாமல் விக்கெட்டை வீழ்த்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் விஷால் ஜெய்ஸ்வால், போட்டி முடிந்ததும் கோலியை சந்தித்தார். அது குறித்த நிகழ்வு இணையத்தில் பரவி வருகிறது.
விஜய் ஹசாரே டிராபி தொடரில் டெல்லி அணிக்காகக் களமிறங்கிய விராட் கோலி, பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (Centre of Excellence) மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிராக நேற்று (டிசம்பர் 26) ஆக்ரோஷமாக ஆடினார். வழக்கம் போல் சதத்தை நோக்கி அவர் முன்னேறிக் கொண்டிருக்க, குறுக்கே நின்றார் 27 வயது இடதுகை சுழற்பந்து வீச்சாளரான விஷால் ஜெய்ஸ்வால்.

61 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து மிரட்டலாக ஆடிக்கொண்டிருந்த கோலிக்கு, விஷால் ஜெய்ஸ்வால் வீசிய பந்து சவாலாக அமைந்தது. பந்து நன்றாக 'டர்ன்' ஆகி அவுட்சைட் எட்ஜைக் கடந்து செல்ல, கிரீஸை விட்டு வெளியேறிய கோலியை விக்கெட் கீப்பர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார்.
கோலி அவுட் ஆனதும், விஷால் ஜெய்ஸ்வாலின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கோலியே ஒரு கணம் பிட்சை உற்றுப் பார்த்துவிட்டுத்தான் பெவிலியன் திரும்பினார்.
போட்டி முடிந்த பிறகுதான் அந்த அழகான சம்பவம் அரங்கேறியது. தன்னை வீழ்த்திய அந்த இளம் பந்துவீச்சாளரை நேரில் அழைத்துப் பாராட்டினார் விராட் கோலி. அதுமட்டுமல்லாமல், அந்தப் போட்டியின் பந்தில் கையெழுத்திட்டு பரிசளித்தார். அவருடன் நின்று புகைப் படமும் எடுத்துக்கொண்டார். இந்தச் சந்திப்பு குறித்து விஷால் ஜெய்ஸ்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
"டிவியில் அவர் உலக கிரிக்கெட்டை ஆள்வதைப் பார்த்து ரசித்த நான், இன்று அவருடன் ஒரே மைதானத்தில் விளையாடுவேன் என்றும், அவரது விக்கெட்டை வீழ்த்துவேன் என்றும் கனவிலும் நினைத்ததில்லை. விராட் பாயின் விக்கெட்டை எடுத்தது என் வாழ்நாள் முழுவதும் நான் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய தருணம். இந்த வாய்ப்புக்கும், இந்த அழகான விளையாட்டுக்கும் நன்றி!" என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் ஹசாரே தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய கோலி (131 மற்றும் 77 ரன்கள்), நேற்றைய போட்டியுடன் பெங்களூருவிலிருந்து கிளம்பிவிட்டார். அதேபோல மும்பை அணிக்காக ஆடிய ரோஹித் சர்மாவும் (155 மற்றும் 0 ரன்கள்) வீடு திரும்பியுள்ளார்.
ஜனவரி 11-ம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன், இவர்கள் மீண்டும் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. அதுவரை விஜய் ஹசாரே தொடரில் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. எது எப்படியோ, இளம் வீரர் விஷால் ஜெய்ஸ்வாலுக்கு இந்த நாள் 'லைஃப் டைம் செட்டில்மெண்ட்' ஆகிவிட்டது.