மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் மற்றும் அவரது மனைவி ஆதியா ஷெட்டி இருவரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்வதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் பேட்கள், கிளவுஸ், ஜெர்சி உள்ளிட்டவை பெற்று ஏலத்தில் விட்டனர். அந்த ஏலத்தில் கிடைக்கக் கூடிய தொகையை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விப்லா தொண்டு நிறுவனத்திடம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கேஎல் ராகுல் மற்றும் ஆதியா ஷெட்டியின் நல்ல நோக்கத்திற்கு உறுதுணையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, விராட் கோலி, பும்ரா, சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா, அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் டிராவிட், டி காக், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களின் நினைவு பொருட்களை அளித்தனர்.

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விராட் கோலியின் ஜெர்சி ரூ.40 லட்சத்திற்கும், அவரின் கிளவுஸ் ரூ.28 லட்சத்திற்கும் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரோஹித் சர்மாவின் கையெழுத்து உள்ள அவரின் பேட் ரூ.24 லட்சத்திற்கும், அவரின் பேட்டிங் கிளவுஸ் ரூ.7.5 லட்சத்திற்கும், ராகுல் டிராவிட்டின் கையெழுத்துடன் கூடிய பேட் ரூ.11 லட்சத்திற்கும், கேஎல் ராகுலின் பேட் ரூ.7 லட்சத்திற்கும் வாங்கப்பட்டது.
அதேபோல் தோனியின் கையெழுத்துடன் கூடிய பேட் ரூ.13 லட்சத்திற்கும் ஏலத்தில் வாங்கப்பட்டது. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் கிளவுஸ் ரூ.3.8 லட்சத்திற்கும், அவரின் கிரிக்கெட் பேட் ரூ.7 லட்சத்திற்கும், ரவிச்சந்திரன் அஸ்வினின் டெஸ்ட் ஜெர்சி ரூ.4.2 லட்சத்திற்கும், தோனியின் பேட்டிங் கிளவுஸ் ரூ.3.5 லட்சத்திற்கும், விராட் கோலி கையெழுத்திட்ட இந்திய அணி ஜெர்சி ரூ.4 லட்சத்திற்கும் வாங்கப்பட்டது.
மேலும் பும்ரா கையெழுத்திட்ட இந்திய அணி ஜெர்சி ரூ.8 லட்சத்திற்கும், ஜடேஜா கையெழுத்திட்ட சிஎஸ்கே ஜெர்சி ரூ.2.4 லட்சத்திற்கும் ஏலத்தில் வாங்கப்பட்டது. அதேபோல் லக்னோ அணிக்காக ஆடி வரும் பூரனின் கிளவுஸ், டி காக்கின் கிளவுஸ், ஸ்டாய்னிஸின் பேட் ஆகியவையும் ஏலத்தில் நல்ல தொகைக்கு வாங்கப்பட்டது. இதன் மூலமாக மொத்தம் ரூ.1.93 கோடி பணம் திரட்டப்பட்டது.