மும்பை: ஆசியக் கோப்பைத் தொடருக்காக தயாராகி வரும் விராட் கோலி, தனது ஃபிட்னஸ் ரகசியங்கள் மற்றும் தன் மீது வரும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
ஆசியக் கோப்பை, உலகக்கோப்பைத் தொடர் உள்ளிட்டவை அடுத்தடுத்து வரும் சூழலில், அனைவரின் கண்களும் விராட் கோலியின் பக்கமே திரும்பியுள்ளன. 2011ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் எப்படி விளையாடினாரோ, அப்படியொரு ஆட்டத்தை விராட் கோலி விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்காக விராட் கோலியும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தனியார் பத்திகைக்கு விராட் கோலி அளித்துள்ள நேர்காணலில், பயிற்சி என்று வந்துவிட்டால் எப்போதும் எனது எல்லையை விரிவுப்படுத்திக் கொள்வேன். உடற்பயிற்சி, ட்ரில்ஸ், உடற்கட்டுக்கான பயிற்சி ஆகியவை விளையாட்டில் நம்மை காயத்தில் இருந்து பாதுகாக்கும். அதேபோல் சரியான ஓய்வும், உடலுக்கான நேரத்தை ஒதுக்குவதும் அத்தியாவசியமானது. சரியான தூக்கமும் அவசியம் என்றே நினைக்கிறேன்.
அதேபோல் நல்ல உணவையும் சாப்பிடுவேன். சில நேரங்களில் பிடித்த உணவை சாப்பிடுவதில், டயட்டையும் மிஸ் செய்கிறேன். சோலா பச்சூர் எனக்கு மிகவும் பிடித்த உணவு. அதேபோல் ஒரு பேலன்ஸிங் டயட்டை பின்பற்ற நினைக்கிறேன். அதேபோல் மனநிலையை சரியாக வைத்துக் கொள்ள, பிடித்த நபர்களுடன் நேரத்தை செலவிடுவேன். அதுதான் எனக்கு எமோஷனலாக வலிமையாக இருக்க உதவுகிறது.
அதேபோல் ரசிகர்களும், விமர்சகர்களும் எப்போதும் ஏதாவது ஒரு கருத்தையோ, விமர்சனத்தையோ வைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அண்மை காலமாக எனது உள்ளுணர்வுக்கு அதிக மதிப்பளிக்கிறேன். அதுவே என் திறமை மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதுதான் கிரிக்கெட்டில் சாதனை படைக்க காரணமாக உள்ளது. கடந்த முறை அடைந்த வெற்றிகள், பாடங்களில் இருந்து கற்றுக் கொண்டு வருகிறேன்.
அதேபோல் தோல்வியில் இருக்கும் போது என்னை நானே உயர்த்திக் கொள்ள, என் தவறுகளை தேடி பார்த்து ஆராய்கிறேன். ஒவ்வொரு முறையும் தோல்வியடையும் போது, மீண்டு வருவதற்கு இத்தகைய பயிற்சிகளே காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.