லண்டன்: இங்கிலாந்தில் தற்போது தங்கி இருக்கும் விராட் கோலி மீண்டும் பேட்டிங் பயிற்சியை தொடங்கியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விராட் கோலி கடைசியாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
அதன் பிறகு நேரடியாக இங்கிலாந்துக்கு வந்த அவர் தனது ஓய்வு நேரத்தில் தனது மனைவியுடன் லண்டனில் உள்ள சொகுசு பங்களாவில் நேரத்தை செலவிட்டு வருகின்றார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் வந்த இந்திய அணி வீரர்களுக்கு தொடர் ஆரம்பிக்கும் முன்பே விராட் கோலி லண்டனுக்கு வீரர்களை அழைத்து விருந்தளித்தார்.

ஆனால் இந்தியா விளையாடும் ஒரு போட்டியில் கூட விராட் கோலி மைதானத்திற்கு சென்று பார்க்கவில்லை. ரோகித் சர்மா கூட மைதானத்திற்கு வந்திருந்த நிலையில், விராட் கோலி மட்டும் இந்திய அணி ஆட்டத்தை பார்க்க வரவில்லை. ஆனால் அதே சமயத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரை விராட் கோலி தனது மனைவியுடன் சென்று கண்டு களித்தார்.
இந்த தருணத்தில் விராட் கோலி லண்டனில் உள்ள உள்ளரங்கு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கின்றது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளரான நயம் அமினுடன் இணைந்து கோலி இந்த பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
விராட் கோலி இனி அக்டோபர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் தான் விளையாட இருக்கின்றார்.
இதற்கு இடையில் அவருக்கு எந்தவித கிரிக்கெட் போட்டியும் இல்லை. இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டி இருந்தது. ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் விராட் கோலிக்கு மேலும் மூன்று மாதங்கள் ஓய்வு கிடைத்திருக்கின்றது. இந்த தருணத்தில் விராட் கோலி எந்த வித போட்டியும் இல்லாமல் ஏன் பயிற்சியை தொடங்கினார் என்று கேள்வி எழுந்துள்ளது.இதனால் விராட் கோலி கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் விராட் கோலி இந்த முடிவை எடுப்பாரா என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.